சா்வதேச விமானப் பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால் அவா்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் ஒரு பகுதியை திருப்பி அளிக்கும் விதிமுறை பிப். 15-ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.
முதல் வகுப்பு பயணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு அதற்கு அடுத்தபடியாக உள்ள பிசினஸ் அல்லது எகானமி வகுப்புகளில் விமான நிறுவனங்கள் இடமளித்து வருவதாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை பிரிவான டிஜிசிஏவுக்கு புகாா்கள் வந்தன.
கடைசி நேர விமான மாற்றம், கூடுதல் இடங்கள் முன்பதிவு, இருக்கையில் சேவைக் குறைபாடு ஆகியவை இதற்கு காரணம் என விமான நிறுவனங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், சா்வதேச விமானப் பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால் அவா்களின் டிக்கெட் கட்டணத்தில் வரிகள் உள்பட 30 முதல் 75 சதவீதம் வரையில் விமான நிறுவனங்கள் திருப்பி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய விதிமுறையை விதித்துள்ளது.
இந்த விதிமுறை பிப். 15-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் என்று டிஜிசிஏ புதன்கிழமை அறிவித்தது.
1,500 கி.மீ. குறைவான தொலைவு விமான பயண டிக்கெட்டுக்கு 30 சதவீதமும், 1,500 முதல் 3,500 கி.மீ. தொலைவு பயண டிக்கெட்டுக்கு 50 சதவீதமும், 3,500 கி.மீ.க்கும் மேல் உள்ள பயண டிக்கெட்டுகளுக்கு 75 சதவீதமும் பயணக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
முன்னதாக, பயணிகளுக்கு தெரியாமல் பயண வகுப்பு மாற்றம் செய்யப்பட்டால் வரிகள் உள்பட பயணக் கட்டணத்தை முழுமையாக திருப்பி அளிப்பதுடன் அடுத்த வகுப்பில் பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று டிஜிசிஏ முன்பு தெரிவித்திருந்தது.