இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானியின் அதானி குழுமப் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைவதன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலிலிருந்தும் கௌதம் அதானியின் இடம் தொடர் சரிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதானி குழுமப் பங்குகள் மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் கடும் சரிவுடன் வணிகமானதைத் தொடர்ந்து அதானியின் சொத்து மதிப்பு சரிந்து, ஏழாம் இடத்திலிருந்து எட்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கும் பணக்காரர்களின் பட்டியலில், திங்கள்கிழமை வணிகத்தின் போது, அதானியின் சொத்து மதிப்பு மேலும் 8.5 பில்லியன் டாலர்கள் சரிந்து 88.2 பில்லியன் டாலர்களாக குறைந்ததன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில், 8ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய உயர்வை சந்தித்த போது, அதானி, உலகப் பணக்காரர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார். அதன்பிறகும் கூட, மிக நீண்ட காலம் மூன்றாவது இடத்திலேயே அதானி நீடித்திருந்தார்.
அதானியின் தொழில் போட்டியாளரும், ரிலையன்ஸ் நிறுவனருமான முகேஷ் அம்பானி, 83 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார். தற்போது அம்பானிக்கும் அதானிக்கும் இடையேயான சொத்து மதிப்பு வித்தியாசம் வெறும் 4 பில்லியன் டாலர்களாக உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, அதன் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பாா்த்தது, வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அந்த அறிக்கை வெளியானதன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகளின் மதிப்பு தொடர் வீழ்ச்சியடைந்தது.
இதனால், வெள்ளிக்கிழமையன்று உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 7ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்ட அதானி, திங்கள்கிழமையன்று 8ஆம் இடத்துக்கு சரிந்துள்ளது.