பிரபல தெலுங்கு நடன இயக்குநர் சைதன்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கில் "தீ" என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடன இயக்குநர் சைதன்யா(30). இவர் நெல்லூரில் உள்ள கிளப் ஒன்றில் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சைதன்யா, கடும் நிதி நெருக்கடி காரணமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
தற்கொலை செய்வதற்கு முன் அவர் வெளியிட்ட விடியோ பதிவில், "எனது அம்மா, அப்பா மற்றும் சகோதரி ஆகியோர் என்னை எந்த பிரச்னையும் சந்திக்க விடாமல் நன்றாக கவனித்துக்கொண்டனர். எனது நண்பர்கள் அனைவருக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
பலரைத் தொந்தரவு செய்தேன், அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். பண விஷயங்களில் எனது நல்லெண்ணத்தை இழந்துவிட்டேன். கடன் வாங்குவது மட்டுமல்ல, அதைத் திருப்பிச் செலுத்தும் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டும். ஆனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை.
தற்போது நான் நெல்லூரில் இருக்கிறேன். எனது கடைசி நாள். எனது கடன் தொடர்பான பிரச்சனைகளை என்னால் தாங்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். சைதன்யாவின் மரணம் குறித்த செய்தி வெளியானதும், நிகழ்ச்சியின் ரசிகர்கள் இணையதளங்களில் தங்கள் வருத்தத்தையும் இரங்கலையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.