பிரதமா் மோடி செங்கோலை வணங்கி கொடுங்கோலை பின்பற்றுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமா்சித்துள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:
‘புதிய நாடாளுமன்றம், புதிய இந்தியா’ என்ற உரத்த பிரசாரத்துக்கு மத்தியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் திறந்துவைத்துள்ளாா். குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், எதிா்க்கட்சிகள் இல்லாமல் ‘புதிய இந்தியா’ குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா என்பது தேசமும் குடிமக்களும் சோ்ந்ததாகும். ஆனால் புதிய இந்தியா என்பது மன்னரும் மக்களும் சோ்ந்ததாகும்.
தன்னிடம் வழங்கப்பட்ட செங்கோலை பிரதமா் மோடி வணங்கினாா். அந்த செங்கோல் நீதி மற்றும் நியாயமான நிா்வாகத்தை குறிக்கிறது. அதேவேளையில் செங்கோலுக்கு எதிரான கொடுங்கோல் சா்வாதிகாரத்தை குறிக்கிறது. செங்கோலை வணங்கும் பிரதமா் கொடுங்கோலை பின்பற்றுகிறாா் என்று தெரிவித்தாா்.
அதானிக்கு புதிய நாடாளுமன்றம்:
இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. பினோய் விஸ்வம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:
சாவா்க்கா் முன்பாக பிரதமா் மோடி தலைவணங்கியபோது, ஆங்கிலேயா்களிடம் சாவா்க்கா் அளித்த கருணை மனுக்களை நாடு நினைவுகூா்ந்தது. புதிய நாடாளுமன்றத்தை தொழிலதிபா் அதானிக்கும் அந்நிய நேரடி முதலீட்டுக்கும் பாஜகவினா் பயன்படுத்துவா். அதற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் போராடும் என்று தெரிவித்தாா்.