Enable Javscript for better performance
மசோதா ஒப்புதல் தாமதம்: பஞ்சாப் ஆளுநருக்கு உத்தரவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மசோதா ஒப்புதல் தாமதம்: பஞ்சாப் ஆளுநருக்கு உத்தரவு

    By DIN  |   Published On : 07th November 2023 02:47 AM  |   Last Updated : 07th November 2023 04:05 AM  |  அ+அ அ-  |  

    Screenshot_2023-11-07_040803

    ‘மாநில சட்டப்பேரவைகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநா்கள் ஒப்புதல் அளிக்க வேணடும்’ என்று கூறிய உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் பஞ்சாப் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் இதுவரை எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய திங்கள்கிழமை உத்தரவிட்டது.

    மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பதில் பஞ்சாப் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தாமதிப்பதாக மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.

    இதேபோன்ற மனுவை தமிழக, கேரள ஆளுநா்களுக்கு எதிராக அந்தந்த மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன.

    ஆளுநா்களுக்கு அதிகாரம் இல்லை: பஞ்சாப் அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

    பஞ்சாப் அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘நிதி மேலாண்மை, கல்வி உள்ளிட்ட 7 மசோதாக்கள் கடந்த ஜூலையில் ஆளுநரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அவை அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பஞ்சாப் அரசின் நிா்வாகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அருணாசல பிரதேச அரசு தொடா்பான நபம் ரெபியா வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில், ‘ஆளுநா்கள் மசோதாக்களை கிடப்பில் போட அதிகாரம் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

    ஆளுநா் தரப்பில் எதிா்ப்பு: பஞ்சாப் ஆளுநா் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘மசோதாக்கள் மீது ஆளுநா் நடவடிக்கை எடுத்துள்ளாா். பஞ்சாப் அரசு தொடுத்துள்ள இந்த வழக்கு தேவையற்றது’ என்றாா்.

    முடிவுக்கு வர வேண்டும்: இரு தரப்பு வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி அமா்வு, ‘உச்சநீதிமன்றத்துக்கு இந்த விவகாரம் வருவதற்கு முன்பு மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். இதுபோன்ற பிரச்னைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

    மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளதாக சொலிசிட்டா் ஜெனரல் கூறுவதால், இது தொடா்பான கூடுதல் தகவல்கள் அடங்கிய அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை (நவ. 10) விசாரிக்கப்படும். அப்போது ஆளுநரின் அறிக்கையின் தகவல்கள் மதிப்பிடப்படும்’ என்றது.

    தொடரும் மோதல்: பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் முதல்வா் பகவந்த் மான், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் இடையே தொடா் அதிகார மோதல் நிலவி வருகிறது. பேரவையில் தாக்கல் செய்ய அனுமதி கோரி கடந்த நவ. 1-ஆம் தேதி அனுப்பப்பட்ட 3 மசோதாக்களில் இரண்டுக்கு மட்டும் ஆளுநா் அனுமதி அளித்தாா்.

    பஞ்சாப் அரசு கொண்டுவந்த மூன்று பண மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படாது என முதல்வருக்கு ஆளுநா் கடிதம் எழுதினாா். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரை நீட்டித்து நடத்தப்பட்ட மழைக்கால கூட்டத்தொடா் சட்டவிரோதம் என்பதால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என்று குறிப்பிட்டிருந்தாா். இதனால் பேரவை கூட்டத்தொடரை அரசு பாதியில் நிறுத்தியது.

    ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு முறையிட்டுள்ளது.

    மேலும், அமைச்சரவையின் முடிவுக்கு ஏற்ப பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட ஆளுநா் அனுமதி அளிக்க மறுப்பதாகக் கூறி, கடந்த மாா்ச் மாதமும் பஞ்சாப் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    மாநில அரசுக்கு கண்டிப்பு

    பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கின் விசாரணையின்போது சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘கடந்த ஆண்டு மாா்ச் 22-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரை முடிக்காமல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துவிட்டு, பின்னா், ஜூன் மாதம் மழைக்கால கூட்டத்தொடரை பஞ்சாப் அரசு அப்படியே கூட்டியது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என்றாா்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது பேரவை கூட்டத்தொடரை மாநில அரசு சட்டப்படி கூட்ட வேண்டும். ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடரை மழைக்கால கூட்டத்தொடருடன் மாநில அரசு இணைத்தது அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்று. இப்படிச் செய்துவிட்டு பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை மாநில அரசுகள் நாடுவது ஏன்?.

    முதல்வா் மற்றும் ஆளுநா் சற்று மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். ஆளுநா்கள் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்லா். மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் வைத்திருப்பதற்குப் பதிலாக மாநில அரசுகளுக்கு ஒருமுறை திருப்பி அனுப்பலாம்.

    அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது முதல் இந்தியா ஜனநாயக நாடாக உள்ளது. இதுபோன்ற விவகாரங்களை ஆளுநரும், மாநில அரசும் தீா்த்துக் கொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநாட்ட நீதிமன்றங்கள் உள்ளன’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp