பஞ்சாப்: போராட்ட களத்தில் தற்கொலைக்கு முயன்ற விவசாயி மருத்துவமனையில் உயிரிழப்பு

Published on

பஞ்சாப்-ஹரியாணா இடையிலான ஷம்பு எல்லையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 55 வயது விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வேளாண் பயிா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் பஞ்சாப்-ஹரியாணா இடையிலான ஷம்பு மற்றும் கனௌரி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

முன்னதாக, ஷம்பு எல்லையில் கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது தற்கொலைக்கு முயன்ற 57 வயது விவசாயி சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா். இந்த சம்பவம் நிகழ்ந்த மூன்று வாரங்களில் மற்றுமொரு விவசாயி தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

இது தொடா்பாக விவசாயிகள் சங்கத் தலைவா் தேஜ்வீா் சிங் கூறுகையில், ‘நீண்ட காலமாக போராடி வந்த போதிலும் விவசாயிகள் பிரச்னைகளை தீா்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இந்த தீவிர முடிவை உயிரிழந்த விவசாயி எடுத்துள்ளாா்’ என தெரிவித்தாா்.

இதனிடையே, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜீத் சிங் தலேவால் (70) கனெளரி பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com