2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தில்லி தேர்தலுக்கு கட்சி தயாராகி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார்.
முன்னதாக நேற்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நிர்வாகக் குழுவுடன் மாநில பாஜ அலுவலகத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் அமைப்பு ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்து கட்சி உறுப்பினர்களுக்கு வழிகாட்டினார்.
இந்த கூட்டத்தில் தில்லி மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவ், தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் ஜெய் பாண்டா, இணை தேர்தல் பொறுப்பாளர் அதுல் கர்க் (எம்பி), இணை பொறுப்பாளர் அல்கா குர்ஜார், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் பவன் ராணா, எம்பி ஹர்ஷ் மல்ஹோத்ரா மற்றும் எம்பி மனோஜ் திவாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், இன்று நட்டா அவரது இல்லத்தில் நடைபெறும் முக்கியமான மையக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அமித் ஷா வந்துள்ளார். கூட்டத்தில் நட்டா முதலில் பாஜகவின் தில்லி தேர்தல் குழுவுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். பின்னர் தேர்தல் நிர்வாகத்தின் பல்வேறு துறைகளின் கூட்டத்தை நடத்தினார் மற்றும் கட்சியின் தேர்தல் ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தார்.
தேர்தலைக் கருத்தில் கொண்டு அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கிய நட்டா, தில்லி பேரவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக வரலாற்று வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். கட்சியின் ஏற்பாடுகளை மேலும் மேம்படுத்துமாறு மாநில பாஜக தேர்தல் குழு மற்றும் தேர்தல் நிர்வாகக் குழு உறுப்பினர்களை நட்டா கேட்டுக் கொண்டார்.
கேஜரிவாலின் ஊழல் மற்றும் பொய்கள்.. பாஜகவின் உண்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பாக இந்த தில்லி தேர்தல் அமைந்துள்ளது என்று அக்கட்சித் தலைவர் கூறினார்.
தில்லி பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட்டு, பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் ஜனவரி 17. வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு ஜனவரி 18 கடைசியாகும். வேட்புமனு திரும்பப்பெற ஜனவரி 20 கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.