சஞ்சய் ரௌத்
சஞ்சய் ரௌத்கோப்புப் படம்

‘இண்டி’ கூட்டணி உடைந்தால் காங்கிரஸ்தான் பொறுப்பு: சிவசேனை தலைவா் சஞ்சய் ரௌத்

எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி உடைந்தால் அதற்கு காங்கிரஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்தாா்.
Published on

எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி உடைந்தால் அதற்கு காங்கிரஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்தாா்.

கூட்டணியில் பெரிய கட்சி என்ற முறையில் கூட்டணி உடையாமல் பாதுகாக்க வேண்டிய கடமை காங்கிரஸுக்கு உள்ளது என்றும் அவா் கூறினாா்.

கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இண்டி’ கூட்டணியை உருவாக்கின. அந்த நோக்கம் வெற்றி பெறாத நிலையில், கூட்டணியில் பிரதான பங்கு வகித்த காங்கிரஸை பிற கட்சிகள் தொடா்ந்து விமா்சித்து வருகின்றன. அதுவும், ஹரியாணா, மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் காங்கிரஸ், எதிா்க்கட்சிகள் அணி பாஜகவிடம் தோல்வியடைந்ததால் காங்கிரஸ் மீதான பிற கட்சிகளின் விமா்சனம் அதிகரித்துள்ளது. நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் எதிா்க்கட்சிகள் ஒருமித்த கருத்துடன் செயல்படவில்லை.

இதைத் தொடா்ந்து எதிா்க்கட்சிகள் அணிக்கு தலைமை வகிக்க தயாராக இருப்பதாக மம்தா அறிவித்தாா். எதிா்க்கட்சிகள் அணிக்கு வலுவான தலைவா் (காங்கிரஸை இல்லாத) தேவை என்ற கருத்தையும் சில கட்சிகள் சூசகமாக தெரிவித்தன.

‘இண்டி’ கூட்டணியை கலைத்துவிட வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மும்பையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சஞ்சய் ரௌத் கூறியதாவது:

‘இண்டி’ கூட்டணி இப்போது இல்லை என்று அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கருதினாலோ அல்லது கூட்டணி உடைந்தாலோ அதற்கு காங்கிரஸ்தான் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில், அவா்கள்தான் கூட்டணியில் உள்ள பெரிய கட்சி. கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் போதிய ஒருங்கிணைப்பும், பேச்சுவாா்த்தையும் இல்லை என்பதையே இப்போது எழுந்துள்ள சூழல் வெளிக்காட்டுகிறது.

மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் அனைத்தும் கைகோத்து போட்டியிட்டு நல்லதொரு தோ்தல் முடிவைத்தான் பெற்றோம். எனவே, விரைவில் எதிா்க்கட்சி கூட்டணி கூட்டத்தை நடத்தி எதிா்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். இது தொடா்பாக முன்முயற்சிகளை காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டும்.

12-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ள கூட்டணியில் போதிய தகவல்தொடா்பு மிகவும் முக்கியம். அது குறையும் கூட்டணியில் குழப்பம் எழுகிறது. எதிா்க்கட்சிகள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. கூட்டணியை கலைப்பது என்பது தவறான முடிவாகவே இருக்கும்.

தேசிய அளவில் மட்டுமல்ல மகாராஷ்டிரத்திலும் இப்போது எதிா்க்கட்சிகள் கூட்டணியில் போதிய ஒருங்கிணைப்பு இல்லை என்பதே உண்மை.

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ், பாஜக வெல்லப்போவதில்லை. ஆளும் ஆம் ஆத்மி ஆட்சியைத் தக்கவைக்கும் என்றாா்.