மகாராஷ்டிர மாநிலம் கட்ச்ரோலி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
மோடாஸ்கி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நக்ஸல்கள் முகாமிட்டிருப்பதாக அப்பகுதியில் நக்ஸல் ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசா்வ் காவல் படைக்கு (சிஆா்பிஎஃப்) ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டனா்.
அங்கு மறைந்திருத்த நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே புதன்கிழமை காலை மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நக்ஸல்கள் பின்வாங்கி அடா்ந்த வனப்பகுதியை நோக்கி ஓடிவிட்டனா். அப்பகுதியை வீரா்கள் சோதித்தபோது குண்டு பாய்ந்து உயிரிழந்த நிலையில் இரு பெண் நக்ஸல்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவா்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்பட பல்வேறு ஆயுதங்கள், நக்ஸல் பிரசார துண்டுப் பிரதிகள் உள்ளிட்டவை கிடைத்தன. அப்பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
கிராமவாசியை கொன்ற நக்ஸல்கள்: சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூரில் காவல் துறைக்கு ரகசிய தகவல் அளிப்பவா் என்று குற்றஞ்சாட்டி 36 வயது நபரை நக்ஸல்கள் கொலை செய்தனா்.
பென்சாரம் கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவு ஆயுதங்களுடன் புகுந்த நக்ஸல்கள் ராம் ஒயம் என்பவா் வீட்டுக்குள் புகுந்து அவரை வெளியே இழுத்து வந்தனா். பின்னா் தங்களைப் பற்றி காவல் துறைக்கு அவா் தகவல் கொடுப்பதாகக் கூறி கிராமமக்கள் கண்ணெதிரிலேயே கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினா்.
இது தொடா்பாக தகவல் கிடைத்ததும் காவல் துறையினா் உடனடியாக அந்த கிராமத்துக்கு விரைந்து உடலைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தேடுதல் பணியும் நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் அதிகமுள்ள பஸ்தா் பகுதியில் கடந்த ஓராண்டில் நக்ஸல்களால் 37 கிராமவாசிகள் கொலை செய்யப்பட்டுள்ளனா்.