21. மேற்கு நைல் வைரஸ் காய்ச்சல்

இந்தக் காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, நோய் வராமல் தடுக்க வேண்டுமானால், கொசுக்களின் உற்பத்திப் பெருக்கத்தைக் குறைப்பது ஒன்றுதான் ஒரே வழி.
21. மேற்கு நைல் வைரஸ் காய்ச்சல்

இது என்ன புதுவிதமான காய்ச்சலாக இருக்கே என்று படிப்பவர்கள் நினைக்கலாம். இந்த வைரஸ், 1937-ல் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆப்பிரிக்கா மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது.

சமீபத்தில், நமது இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. கேரளாவில் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 7 வயதுச் சிறுவன், இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான். 2011-ம் ஆண்டுகளில் இருந்தே கேரளாவில் வைரஸ் மூளைக்காய்ச்சல் ஏற்படுவதற்கு இந்த வைரஸும் ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது.

இந்த வைரஸ் குறித்து..

மேற்கு நைல் வைரஸ் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ், டெங்கு வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. அதாவது, ஃப்ளாவி வைரஸ் வகையாகும். இது ஒரு ஆர்.என்.ஏ. வைரஸ் வகை, சுமார் 45 - 50 நானோ மீட்டர் அளவு கொண்டது. இந்த வைரஸ் பெரும்பாலும் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடியது.

பரவுவது எப்படி?

இந்தக் காய்ச்சலுக்கான வைரஸ், கியூலக்ஸ் வகை பெண் கொசுக்களால் மனிதர்களுக்குப் பரவுகிறது.

இந்த வைரஸ் பல்வேறு பறவை இனங்களின் உடலிலும் காணப்படும். அங்குதான், அவற்றில்தான் இந்த வைரஸ் பல்கிப் பெருகுகிறது. இந்த மேற்கூறிய கொசு இனங்கள் பறவைகளிடம் இந்த வைரஸை பரப்புவதுடன், சில சமயங்களில் மனிதர்களுக்கும் பரப்பிவிடும். சில விலங்குகளிடம் குறிப்பாக குதிரைகளுக்கும் இந்தக் காய்ச்சலை பரப்பிவிடும்.

தவிர, ரத்தம் மூலமாகவும், உறுப்பு தானத்தின் மூலமாகவும் இந்த வைரஸ் பரவலாம்.

மேலும், பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து சிசு மற்றும் குழந்தைக்கும் பரவலாம். (கர்ப்பிணியாக இருக்கும்போதோ அல்லது பாலூட்டும்போதோ).

தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால், ஆய்வக்கூடத்தில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படலாம்.

நோய் அறிகுறிகள்..

இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட அனைவருக்குமே தொந்தரவுகள் ஏற்படுவதில்லை. அதாவது, காய்ச்சல் ஏற்படாமல்கூட இருக்கும்.

ஒரு சிலருக்கு காய்ச்சல் ஏற்படும். அத்துடன், தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்றோட்டம், தோல் தடிப்புகள் ஆகிய தொந்தரவுகள் ஏற்படலாம். இவ்வாறு காய்ச்சல் ஏற்பட்ட பலருக்கும் காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். ஆனால், உடல் அசதியும், சோர்வும் பல வாரங்களுக்கு இருக்கும்.

சிலருக்கு அபூர்வமாக காய்ச்சல் அதிகரித்துக்கொண்டே போகும். இவர்களுக்கு வைரஸ் மூளையைத் தாக்குவதால் மூளைக்காய்ச்சல் ஏற்படும். இதன்காரணமாக, தாங்க முடியாத தலைவலி, வலிப்பு, பார்வை மங்குதல், கழுத்துப் பிடிப்பு, கை கால் நடுக்கம், தசைத் தளர்வு, மதமதப்பு, பக்கவாதம் ஆகிய பாதிப்புகள் ஏற்படலாம்.

நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளவர்களையும், உறுப்பு மாற்றம் செய்துகொண்டவர்களை இந்த வைரஸ் பெரிதும் பாதிக்கலாம். முதியவர்களும், உடல் எதிர்ப்பாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்படலாம். மூளை, நரம்பு மண்டல பாதிப்பினாலும், மூளைக்காய்ச்சலாலும் இறப்பு சம்பவிக்கலாம்.

*

இந்த வைரஸ் காய்ச்சல் மூளையைத் தாக்கி, மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துவதால், அது பிற வகை மூளைக்காய்ச்சலைப் போலவே தொந்தரவுகளைக் கொண்டிருக்கும். எண்ணற்ற வைரஸ் வகைகளும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும். எனவே, அவற்றில் இருந்து இந்தக் காய்ச்சலை வேறுபடுத்திக் கண்டுபிடிக்க, இந்த வைரஸுக்கான எலீஸா, பி.சி.ஆர். பரிசோதனைகள் அவசியமாகும். இதன்மூலம்தானம் இந்தக் காய்ச்சலை உறுதி செய்ய முடியும்.

ஆனாலும், இந்தக் காய்ச்சலுக்கென, அதாவது இந்த வைரஸை அழிப்பதற்கான, கட்டுப்படுத்துவதற்கான விசேஷ மருந்துகள் (வைரஸை அழிக்கும் மருந்துகள்) இல்லாத காரணத்தால், நோயாளிகளுக்குப் பொதுவான சிகிச்சைகளையே செய்யவேண்டி உள்ளது.

ஆய்வுக்கூட பரிசோதனைகள்

இவர்களுக்கு காய்ச்சலுக்கான பொதுவான ரத்த, சிறுநீர் பரிசோதனைகளுடன், இந்த வைரஸை கண்டறிவதற்கான பரிசோதனைகளையும் செய்ய வேண்டும்.

இவர்களுக்கு, மூளை, தண்டுவடத்தைச் சுற்றியுள்ள நீரில் (CFS) இந்த வைரஸுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் புரதங்களைக் கண்டறியும்  பரிசோதனைகள் செய்யப்படும்.

எலீஸா பரிசோதனை

முதலில் (WNV - IgM antibody) இந்த வைரஸுக்கு எதிரான ஐஜிஎம் எதிர்ப்பாற்றல் புரதத்தைக் கண்டறிய வேண்டும். இந்தப் புரதம், தொற்று ஏற்பட்ட 3 - 8 நாள்களுக்குள் ஏற்பட்டு, 1 - 3 மாதங்கள் வரை காணப்படும். இதனை எலீஸா பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

ஐஜிஜி பரிசோதனை (WNV - IgG antibody) ஏற்கெனவே தொற்று ஏற்பட்டுள்ளது என்பதற்கான அடையாளமாகும்.

பி.சி.ஆர். பரிசோதனை

மேலும், (PRNTs - Plaque Reduction Neutralization Tests), பி.ஆர்.என்.டிஸ் பரிசோதனையும் பி.சி.ஆர். (PCR) பரிசோதனையும் செய்யப்படும். பி.சி,ஆர். பரிசோதனை மூலம் இந்த வைரஸின் ஆர்.என்.ஏ.வை கண்டறிந்து  உறுதிப்படுத்த முடியும்.

சிகிச்சைகள்

இந்தக் காய்ச்சலை குணப்படுத்த மருந்துகள் இல்லை. அதாவது, இந்தக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸை அழிப்பதற்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே, இவர்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல்வலியைப் போக்குவதற்கான பாராசிட்டமால் போன்ற மருந்துகள் தரப்படும். சிலருக்கு மோசமான பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் ஏற்பட்டால், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து, திரவ மருந்துகளையும் செலுத்த வேண்டும். காய்ச்சலையும் பிற தொந்தரவுகளையும் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.

தடுப்பது எப்படி?

இந்தக் காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, நோய் வராமல் தடுக்க வேண்டுமானால், கொசுக்களின் உற்பத்திப் பெருக்கத்தைக் குறைப்பது ஒன்றுதான் ஒரே வழி. ஆகவே, சுற்றுப்புறத்தை நீர் தேங்காமலும், சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com