21. குழந்தைகள் உயிரோடு இருப்பது எதைவிடவும் அவசியம்

வேடசந்தூருக்கு அருகே தனது மகனின் பள்ளிக் கட்டணத்தை கட்ட இயலாத காரணத்தால் தனது மகனைக் கொன்றுபோட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான் அந்த மனிதன்.

வேடசந்தூருக்கு அருகே தனது மகனின் பள்ளிக் கட்டணத்தை கட்ட இயலாத காரணத்தால் தனது மகனைக் கொன்றுபோட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான் அந்த மனிதன். இந்த இரண்டு மரணங்களைப் போல என்னைத் ஆழத் துயரத்தில் சமீபத்தில் எதுவும் அமிழ்த்தியிருக்கவில்லை

அந்தக் குழந்தை எந்த வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான் என்பது சரியாகத் தெரியவில்லை. அநேகமாக மூன்றாம் வகுப்பாயிருக்கலாம். அல்லது நான்காம் வகுப்பாக இருக்கலாம். எந்த வகுப்பு என்பது இந்தப் பதிவிற்கு தேவையே இல்லை என்பதால் அதைத் கண்டடைய நேரத்தை செலவு செய்யத் தேவையில்லை.

அந்தக் குழந்தையின் பள்ளிக் கட்டணத்தைக் கட்டாததால் அவனை வகுப்பிற்கு வெளியே நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அந்தப் பிஞ்சு அவமானத்தாலும் வலியாலும் வெகுவாக உடைந்துபோயிருக்கிறான். வீட்டிற்கு வந்ததிலிருந்து உறங்கும்வரை அழுதிருக்கிறான்.

‘புள்ளைக்குஃபீசு கட்ட முடியல, இதெல்லாம் என்ன ஒரு பொழப்பு?’ என்பது மாதிரியாக வீட்டில் பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது. பிரச்சினையோடும் சன்னமான சண்டையோடும் கணவனும் மனைவியும் ஒருவழியாய் உறங்கிப்போயிருக்கிறார்கள்.

விடிந்ததும் கட்டணம் கட்டச் சொல்லி பிள்ளை அழுகையைத் தொடங்கியிருக்கிறான். பள்ளிக்குப் போகுமாறும் இன்னும் இரண்டு நாட்களில் கட்டிவிடலாம் என்றும் தந்தை சொன்னதை அந்தக் குழந்தையால் ஏற்க இயலவில்லை. கட்டணம் கட்டாவிட்டால் அவன் பள்ளிக்கு போகமாட்டான் என்பது புரிந்து போன ஒரு புள்ளியில் கணவனை சத்தமாக சண்டை போட்டபடியேயும் சபித்தபடியேயும் நகைகளை எடுத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு அருகில் இருக்கும் அடகுக்கடைக்கு அந்தக் குழந்தையின் தாய் போயிருக்கிறார்.

வீட்டில் இருந்த பையன் அழுதுகொண்டே இருந்திருக்கிறான். தந்தையோ பள்ளிக்கு போகுமாறும் நகை அடகு வைத்த பணம் கைக்கு வந்ததும் கொண்டுவந்து பள்ளியில் கட்டி விடுவதாகவும் சொல்லியிருந்திருக்கிறார். அதை மறுத்த பையன் தனது முந்தைய நாள் அவமானத்தையும் வலியையும் அழுகையினூடாகவே சொல்லியிருக்கிறான்.

மகன் பட்ட அவமானமும், தன்னால் மகனது பள்ளிக் கட்டணத்தைக்கூட கட்டமுடியாமல் போனதே என்கிற ஆதங்கமும் அந்த மனிதனை உறுத்திக் கொண்டே இருந்திருக்கிறது. போதாக் குறைக்கு கல்விக் கட்டணத்தைக்கூட கட்ட இயலாத தனது கையாலாகத்தனத்தை மனைவி இடித்துரைத்ததில் தனது கௌரவம் சிதைந்துபோய் விட்டதாகவே உணர்ந்திருக்கிறார். அத்தோடு மகனது தொடர் அழுகை அவரை இன்னும் நோகடித்திருக்கிறது. இவை அனைத்தும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றாய் சேர்த்து அவரைத் தாக்க நொந்துபோன அந்த மனிதன் கனநேர பதட்டத்தில் உந்தப்பட்டவராய் அழுதுகொண்டிருந்த தனது மகனையும் கொன்று போட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருந்திருக்கிறார்.

நகையை அடகு வைத்து வைத்து எடுத்து வந்த பணத்தில் தனது கணவன் மற்றும் குழந்தையின் ஈமக் காரியங்களை செய்திருக்கிறார் அந்தப் பெண்.

ஆக, கல்விக் கட்டணம் ஒரு குழந்தையையும் அவனது தந்தையையும் காவு வாங்கியிருக்கிறது. சரியான பாஷையில் சொல்வதெனில் தனியார் பள்ளியின் கல்விக் கட்டண நெருக்குதல் இரண்டு உயிர்களின் மரணத்திற்கு காரணமாயிருக்கிறது. இன்னும் சரியாய் சொல்வதெனில் தனியார் பள்ளி ஒன்றின் நிர்வாகம் கொடுத்த கட்டண நெருக்கடி ஒரு தந்தை மற்றும் மகனது சாவிற்கு காரணமாயிருக்கிறது. இன்னும் மிகச் சரியாய் சொல்வதெனில் தனியார் பள்ளி கல்விமுறை ஒரு தகப்பனையும் மகனையும் கொன்று போட்டிருக்கிறது, ஒரு இளம்பெண்ணை அனாதையாக்கி இருக்கிறது.

இது வெளியே தெரிந்த விவரம் என்ற வகையில் இதுகுறித்து நாம் அலசிக் கொண்டிருக்கிறோம். இதுபோல் இன்னும் பல சாவுகள் வெளியே தெரியாமலே போய் இருக்கும். நம் கவனத்திற்கு வராமல் போன வெளியே தெரிந்த இந்த வகையிலான உயிர்ப் பலிகளும் நிறைய இருக்கும்.

நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகும் தற்கொலை செய்து கொள்ளும் பள்ளிக் குழந்தைகளின் எண்ணிக்கை நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. தனியார் பள்ளி மாணவர்களும் ‘உண்டு உறைவிட’ தனியார் பள்ளி மாணவர்களும்தான் பேரதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று நடத்தப்பட்ட ஆய்வொன்று கூறுகிறது.இதோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் பொதுப்பள்ளிக் குழந்தைகளின் தற்கொலை என்பது ‘இல்லவே இல்லை’ என்று சொல்லும் அளவிற்குத்தான் இருக்கிறது என்றும் அந்த ஆய்வு தனது முடிவில் கூறுகிறது.

எப்போதாவது அபூர்வமாய் நிகழும் பொதுப்பள்ளிக் குழந்தைகளின் தற்கொலைக்கு ஒருபோதும் பள்ளிக் கட்டண நெருக்கடி காரணமாக இருந்ததே இல்லை என்பதையும் அந்த ஆய்வு எடுத்துச் சொல்லத் தவறவில்லை.

பாட நெருக்கடியும் பொதுப்பள்ளிக் குழந்தைகளை காவு வாங்கியதில்லை. இதை பகிர்ந்து கொள்ளும் அதே நேரத்தில் கல்வித்துறையும் அரசாங்கமும் தமது குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வியின் தரம்குறித்து கவலைப்படாமல் தேர்ச்சி விழுக்காடு மற்றும் மதிப்பெண் விஷயத்தில் மட்டுமே நெருக்கடிகளைத் தொடரும் என்றால் அது ’இல்லவே இல்லை’ என்று சொல்லுமளவிற்கு பொதுப்பள்ளிக் குழந்தைகளின் தற்கொலைக் கணக்கை தொடங்கி வைத்துவிடும்.

’படிப்பு முக்கியந்தாங்க, இல்லேன்னு சொல்லல. ஆனா புள்ளைங்க உசிரு எதைவிடவும் முக்கியமுங்க’ என்று பெற்றோர்கள் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். நான் பணியாற்றும் பள்ளியானது சென்னை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் (NH 45) அமைந்திருக்கிறது. ’நான்குவழிச் சாலை’யாக அது மாற்றப்பட்டவுடன் எங்கள் பள்ளி மாணவர்களின் ‘இடை நிற்றல்’ அதிகமானது. சாலையைக் கடந்து பள்ளிக்கு வரவேண்டிய இருபது குழந்தைகளுக்கு மேல் பள்ளிக்கு வருவதை நிறுத்தியிருந்தனர். அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் ஆடுமாடு மேய்ப்பவர்களாகவும், அன்றாடம் கூலிக்கு வேலைக்குப் போகும் மக்களாகவுமே இருந்தனர்.

ஆசிரியர்கள் அவர்களின் வீடுகளுக்குப் படை எடுத்தோம். ஒரு குழந்தையின் வீட்டிற்கு நானும் எனது சக ஆசிரியர் கனகராஜ் அவர்களும் சென்றோம். அந்த வீட்டிலிருந்து இரண்டு குழந்தைகள் இடை நின்றிருந்தனர். கனகராஜ் அவர்களுக்கு அந்தக் குழந்தைகளின் பெற்றோர் நன்கு தெரிந்தவர்கள். அந்த உரிமையில் ‘ஏம்பா நாமதான் என்ன பாவம் செஞ்சோமோ இப்படி செம்மரிக் குட்டிகளோடு ஓரியாடிக் கொண்டிருக்கிறோம். படிச்சாதானே நம்ம புள்ளைங்களாவது இந்தச் சனியனிலிருந்து மீண்டு ஏதோ ஒரு வேலவெட்டிக்குப் போகும்’ என்று தோழர் கனகராஜ் கூறினார். இதைக் கேட்டவுடன் , ’நீங்க சொல்றதென்னவோ வாஸ்தவம்தான் சாரு. ஆடுமேச்சாவது வவுத்தக் கழுவ புள்ளைங்க உசுரோட இருக்க வேணாமுங்களா?’ என்று கேட்டார்.

இருவரும் ஒருகணம் பதறிப்போனோம். குழந்தைகளின் உசிர்குறித்து கவலைப்படுமளவிற்கு நமக்குத் தெரியாமல் பள்ளியில் என்ன நடக்கிறது? ஏதேனும் ஆசிரியர்கள் கடுமையாக நடந்து கொள்கிறார்களா? அதுகுறித்து அவரிடம் நேரிடையாகவே கனகராஜ் அவரிடம் கேட்டார். அது மாதிரியெல்லாம் பள்ளியில் பிரச்சினைகள் இல்லை என்றும் இன்னும் சொல்லப் போனால் தனது பிள்ளைகளுக்கு மிதியடியைக்கூட ‘குணா சார்’தான் வாங்கிக் கொடுத்ததாகவும் கூறியவர் ‘இந்தப் பொருவுங்கள இவ்ளோ பெரிய ரோட்ல எப்படிங்க சார் அனுப்புறது.உசுரு முக்கியமுங்களே?’

ஏற்கனவே நாங்கள் அதுகுறித்து யோசித்தே இருந்தோம். மட்டுமல்ல காலையில் சாலையின் அந்தப் பகுதியில் இருந்து வரும் மாணவர்கள் சாலைக்கு அந்தப் பக்கமே மரத்தடியில் நிற்க வேண்டும் என்றும் எங்களில் யாராவது ஒருவர் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கு சென்று குழந்தைகளை சாலையைக் கடத்திக் கூட்டி வருவதாகவும், மாலையில் குழந்தைகளை சாலையைக் கடந்து கொண்டுபோய் விட்டுவிட்டு வருவதாகவும் முடிவெடுத்து இருந்ததோடு நடைமுறைப்படுத்தவும் தொடங்கியிருந்தோம். அதைக் கூறியதும் அவர் தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பச் சம்மதித்தார்.

சாலையைக் கடப்பது தனது பிள்ளைகளுக்கு ஆபத்தைக் கொண்டு வரும் என்பதால் கல்வியே போனாலும் தமது குழந்தைகளின் உயிர் முக்கியம் என்று அந்தப் பெற்றோர் நினைப்பது ஏன் பெற்றோர்களின் பொதுப்புத்தியாக மாறாது போனது?

ஆடு மேய்க்கும் ஒரு சராசரி பெற்றோருக்கு இருக்கும் தனது குழந்தைகளின் உயிர் மீதான அக்கறை ஏன் நிறைய பெற்றோர்களுக்கு இல்லாது போனது? அப்படியெல்லாம் இல்லை, எல்லோருக்கும் இந்த அக்கறை இருக்கவே இருக்கிறது என்றால் தற்கொலைக்கான நெருக்கடிகள் நிறைந்தது தனியார் பள்ளிகள் என்பது தெரிந்திருந்தும் அவர்கள் ஏன் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆசைப்படுகிறார்கள், சேர்க்கிறார்கள்.

                 ’போதி மரத்தடியில்
                  புத்தனுக்கு ஞானம் கிடைத்த
                  விவரத்தை
                  முப்பது ஆண்டுகளாக
                  வேப்ப மரத்தடியில்தான்
                  சொல்லித் தருகிறோம்’

என்று முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணன் முத்துநிலவன் ஒரு கவியரங்கில் வாசித்தார். அது உண்மைதான், இல்லை என்று மறுக்கவில்லை. பொதுப்பள்ளிகளின் தரம் முற்றாய் மாறிவிட்டதென்றெல்லாம் கூறவும் இல்லை. ஆனால் இவ்வளவு மோசமான கட்டமைப்புகளோடு நடைபெறும் எந்த ஒரு பொதுப் பள்ளியிலும் ஒருநூறு குழந்தைகள் ஒரே நேரத்தில் கதறக் கதற எரிந்து செத்ததில்லை.

தொண்ணூற்றி நான்கு குழந்தைகள் ஒரே நேரத்தில் கருகிச் செத்தபோது அழுது துடித்தோம், பொங்கினோம். ஆனால் அந்த நெருப்பின் சூட்டிலிருந்து படிக்கவேண்டிய பாடத்தைப் படித்தோமா? ஒழுங்காகப் படித்திருந்தால் அதே கும்பகோணத்தில், சம்பவம் நடந்த பள்ளி இருக்கும் தெருவிற்கு அடுத்தத் தெருவில், ஏன் அதே தெருவில் அதே அளவு கட்டுமானத்தோடு அல்லது அதைவிடவும் கட்டுமான வசதிகளோடு இருக்கும் தனியார் பள்ளிகளில் நம் குழந்தைகளைக் கொண்டுபோய் குவிப்போமா?

தேர்ச்சியும் மதிப்பெண்ணும்தான் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. காரணம், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களையும் அரசுப் பள்ளிக் குழந்தைகளே அள்ளிக் குவித்திருந்தனர்.

2014 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் 27 அரசுப் பள்ளிக் குழந்தைகள் ஆங்கிலத்திலும்,1056 அரசு பள்ளிக் குழந்தைகள் கணிதத்திலும், 6712 அரசுப் பள்ளிக் குழந்தைகள் அறிவியல் பாடத்திலும், 2129 குழந்தைகள் சமூக அறிவியல் பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்திருந்ததாக தோழர் இல. சண்முகசுந்தரம் கூறுகிறார்.

எதை எதையோ சாதனைகளாக விளம்பரம் செய்து கொண்டாடும் அரசு இந்தச் சாதனையை இன்னும் பெரிதாய் கொண்டாடி இருக்க வேண்டாமா? சினிமாவில் ஏதோ ஒரு காட்சியில் இயல்பாய் அழுத ஒரே காரணத்திற்காக நடிகர்களை அழைத்து பெரிது படுத்தும் ஊடகங்கள் இந்தக் குழந்தைகளை அவர்களது ஆசிரியர்களை அழைத்து கொண்டாடி இருக்க வேண்டாமா?

ஏறத்தாழ பதினான்கிற்கும் மேற்பட்ட விலையில்லா பொருட்களை அரசு தனது பள்ளி மாணவர்களுக்கு வழங்குகிறது. கட்டணம் பொதுப்பள்ளிகளில் இல்லவே இல்லை. பொதுப் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கும் தலித் மாணவர்களுக்கும் நிறைய சலுகைகளை அரசு வழங்குகிறது. இவற்றில் எதுவும் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடையாது. மேலும், தனியார் பள்ளிகளில் இருக்கும் தற்கொலைக்கான நெருக்கடி இங்கு இல்லவே இல்லை.

நிலைமை இப்படி இருக்க சுயநிதிப் பள்ளிகளை நோக்கியே ஏன் இவ்வளவு படையெடுப்பும் நடக்கிறது?

இரண்டு விஷயங்களை மட்டும் இங்கு உங்கள் பரிசீலனைக்காக வைக்கிறேன்.

முதலாவதாக, கழிவறை வசதிகள். தமிழ்நாட்டில் உள்ள பதினைந்து விழுக்காடு பொதுப் பள்ளிகளில் சுத்தமாக கழிவறை வசதியே இல்லை என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தெரிவித்திருந்த்து. எண்ணிக்கைபடி பார்த்தால் 5720 பள்ளிகளில் கழிவறை வசதி இல்லவே இல்லை என்றும் அதில் 1442 பள்ளிகள் மகளிர் பள்ளிகள் என்றும் தெரிகிறது.

குழந்தைகள் குறைந்தால் பள்ளிகளை மூடும் அரசாங்கம் கழிவறையே இல்லாத பெண்குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை ஏன் இன்னும் மூடவில்லை என்பது சந்தேகமாக இருக்கிறது. வயதுக்கு வந்த பெண் குழந்தைகள் மாதா மாதம் தங்களது இயற்கை சுழற்சியின் போது என்ன பாடுபடுவார்கள். அதுவும் இருபாலர் படிக்கும் பள்ளிகளில் இவர்களது சிரமம் எவ்வளவு கொடூரமானது என்பதை உணர வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த புள்ளிவிவரத்தில் ஒரு சிறு துண்டை மட்டும் இங்கு பார்ப்போம்.

இந்தப் புள்ளி விவரம் எடுக்கப்பட்டபோது அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 28981. அங்கு படித்த மாணவர்களின் எண்ணிக்கை 21,45,716. அங்கு பணியாற்றிய ஆசிரியர்களின் எண்ணிக்கை 88,301.

இதே நேரத்தில் சுயநிதி துவக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 6196. அங்கு படித்த குழந்தைகளின் எண்ணிக்கை 8,14,640. அங்கு பணியாற்றிய ஆசிரியர்களின் எண்ணிக்கை 54866.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளில் ஏறத்தாழ 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதும் சுயநிதிப் பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதும் கன்னத்தில் ஓங்கி அறையும் உண்மைகள். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர் மாணவர் விகிதங்கள் இன்னும் மோசமாக இருக்கும். நிரவலுக்கு முன்னால் கணக்கில் இருந்த ஆசிரியர்களின் எண்ணிக்கயாகத்தான் இது இருக்கும். அதுவும் நிரப்பப் படாத ஆசிரியர்களையும் சேர்த்த கூடுதலாக இது இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். அதை எல்லாம் சரியாக கணக்கில் கொண்டால் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று ஆகும்.

அரசு செய்ய வேண்டியவை

  1. கழிவறைகள் மீது கவனம் செலுத்தி தமது பள்ளிகளில் போதுமான அளவு கட்டமைப்பது.

  2. ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது.

இவற்றை செய்வது மாணவர்களின் தற்கொலையை குறைக்கும்.

குழந்தைகள் நன்கு படிப்பது அவசியம். குழந்தைகள் உயிரோடு இருப்பது எதைவிடவும் அவசியம்.

பின் குறிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள புள்ளி விவரங்களை இல. சண்முகசுந்தரம் எழுதி ‘பாரதி புத்தகாலயம்’ வெளியிட்ட ‘எது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க’ என்ற நூலில் இருந்து நன்றியோடு பயன்படுத்தியுள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com