அத்தியாயம் 8 - முக்கோணக் கற்பனைக் கதை

நேர் முக்கியத் தேர்வில், ஒரு நிறுவனத்தின் பிரதிநிதி நம்மை, நம் அறிவை நம் குணாதிசயங்களை,

நேர் முக்கியத் தேர்வில், ஒரு நிறுவனத்தின் பிரதிநிதி நம்மை, நம் அறிவை நம் குணாதிசயங்களை, பல்வேறு சோதனைகள் மூலம் கண்டறிகிறார். அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கும்.

பொதுவாக, நேரடியாகக் கேட்பதைவிட, மறைமுகமாகக் கேட்டு, அதன்மூலம் நமது இயல்பான திறனை வெளிக்கொண்டுவருவதுதான் நிறுவனங்களின் நேர்முகத் தேர்வுச் சூத்திரமாக இருக்கிறது. அந்த வகையில்தான், வேலை கேட்டு வருபவரின் கற்பனைத் திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பல்வேறு கேள்விகள் மூலம் கண்டறிவார்கள். அப்படிப்பட்ட ஒரு கேள்வியைத்தான் சென்ற வாரம் கேட்டிருந்தேன்.

அந்தக் கேள்விக்கு பதிலைப் பார்ப்போம்.

5 + 5 + 5 = 550 என்றவுடன், அந்தக் கூட்டல், கழித்தல், பெருக்கலில்தான் ஏதோ செய்ய வேண்டும் என்று அந்தக் குறிகளில் சில கோடுகளைப் போட்டுப் பார்த்து, விடை வராமல் திண்டாடிக்கொண்டிருப்போம்.

ஆனால், உண்மையான கற்பனை சக்தி உள்ளவர்கள், கூட்டல் குறியை (+), ஒரு கோடு போடுவதன் மூலம் 4 என்ற எண்ணாக ஆக்கிவிடலாம் என்று தெரிந்துகொண்டுவிடுவார்கள்.

அதன்படி, 5 4 5 + 5 = 550 என்று ஆக்கிவிட்டு, சென்றுகொண்டே இருப்பார்கள்.

இதில், கற்பனை என்பது எங்கு வருகிறது என்று பார்ப்போம். ஒரு முக்கோணத்தைப் பார்க்கிறோம். அதைப் பார்த்தால், என்ன நினைவுக்கு வருகிறது என்று கேட்கும்போது,

இது ஒரு முக்கோணம்.  

ஒரு கிராமக் குடிசையின் விளக்குப் பிறை
கோன் ஐஸ் தலைகீழாக உள்ளது
உடைந்த நட்சத்திரம்
சிங்கத்தில் பல்
ராக்கெட்டின் நுனி
கண்ணாடித் துண்டு
பென்சில் முனை
கலைடாஸ்கோப்பின் குறுக்குவெட்டுத் தோற்றம்
Puzzle-ன் ஒரு துண்டு
கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி
என்று பல கோணங்களில் கற்பனை செல்லும். நாம் எதைச் சொல்கிறோம் என்பதை வைத்தே, அந்த மனிதரின் குணாதிசயத்தைக் கணித்துவிட முடியும் என்று உளவியல் சொல்கிறது. இவற்றை மீறி, ஒரு முக்கோணத்தைப் பார்த்தவுடன், உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறது என்று கேட்டபின்...

‘ஒண்ணும் தோணலை சார்…’ என்று தட்டையாகப் பதிலளிக்கும் ஆள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களைத்தான் நிறுவனம் கழித்துக்கட்ட முயற்சி செய்யும். ஏனெனில், இவர்கள் எதையுமே அதன் வட்டத்திலிருந்தோ, கட்டத்திலிருந்தோ வெளியில் சென்று யோசிக்கமாட்டார்கள். அதற்குள்ளேயே உழன்றுகொண்டிருப்பார்கள். இன்னும் ஒருவிதமான ஆள்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் மேற்கண்ட கேள்வியைக் கேட்டபின், இப்படி ஆரம்பிப்பார்கள்.

என்ன வேணும்னாலும் சொல்லலாமா சார்?

ம்…

நான் சொல்ற பொருள்ல முக்கோணம் இருக்கலாமா சார்?

ம்ம்...

அந்தப் பொருளே முக்கோண ஷேப்புலதான் இருக்கணுமா சார்?

ம்ம்ம்…

கையால தூக்குற பொருளாத்தான் இருக்கணுமா சார்?

அப்படி இருக்கணும்னு அவசியமில்லை…

அது நாம தினசரி பாக்குற விஷயமா இருக்கலாமா சார்?

இருக்கலாம்…

அதை நாமளும் பயன்படுத்துற மாதிரி இருக்கலாமா சார்?

ஹலோ... நீங்க என்ன தோணுதுன்னு சொல்லுங்க பாஸ்… ஏன் இவ்வளவு கேள்வி கேக்குறீங்க?

ம்… நீங்க நினைச்சதை கண்டுபிடிச்சிட்டேன். அம்புக்குறியோட மேல்பாகம்தானே சார்!! என்று, அவர் இவ்வளவு வடிகட்டுதலுக்குப் பிறகு தோன்றியதை, நாம் நினைத்ததாகச் சொல்லுவார்

அந்த விநாடியில், நேர்முகத் தேர்வு எடுப்பவரின் ரத்த அழுத்தத்தைச் சோதித்துப் பார்த்தால், அந்தச் சோதனைக் கருவியே வெடித்துவிடும் அளவுக்கு எகிறி இருக்கும்.

இந்த மாதிரி ஆள்கள், தனக்குப் பதில் தெரியவில்லை என்று நேரடியாகச் சொல்லாமலும், அதே நேரம் சரியாக ஒன்றும் தோன்றவில்லை என்பதால், காலம் தாழ்த்தியும், கேள்விகளால் குழப்பத்தை ஏற்படுத்தியும், கடைசியில் ‘சப்’பென்று ஒரு பதிலைச் சொல்லிவைப்பார்கள். இவர்களை இன்னும் ஜாக்கிரதையாகக் கழட்டி விடவேண்டி இருக்கும். ஆனால், இத்தகைய நபர்களை சில சேவை நிறுவனங்கள், வேலை தாமதமானதற்குக் காரணம் சொல்லி வாடிக்கையாளரைச் சமாளிக்கத் தேர்வு செய்துவிடுவார்கள்.

சரி... கற்பனை சக்தி என்பது நமக்கு உண்மையிலேயே இருக்கிறதா இல்லையா என்று எப்படி சோதித்துக்கொள்வது?

நாம் பார்க்கும் அனைத்துப் பொருள்களிலும், வேறு ஒரு மாற்றுப் பொருளை உங்களால் சிந்திக்க முடியும் என்றால், கற்பனை சக்தி உங்களிடம் வந்துவிட்டதாக அர்த்தம்.

சாதாரணமாகவே நாம் பொய் சொல்லிப் பழகியிருக்கிறோம். சிறுவயதில், பள்ளிக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு, அன்று ரஜினி படம் ரிலீஸுக்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் தாமதமாக வந்தால், அம்மாவிடம் அளந்துவிட ஆரம்பிப்போம். அது நமது கற்பனையாகத்தான் இருக்கும். ஆனால், நம்பும்படி இருக்க மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்வோம்.

ஒரு ஃபிரண்டு வர வழில விழுந்துட்டான். அவனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்ட்டு வர லேட்டாயிருச்சு!

ஒரு வீட்டுப்பாடம் முடிக்கவேண்டி இருந்தது. ஸ்கூல்லயே உக்காந்து முடிச்சிட்டு வந்தேன் என்று பொய் சொல்ல ஆரம்பிப்பதுதான், கற்பனை சக்தியின் ஆரம்பம்...

இப்படி அளந்துவிட்டபின்,.. அம்மா ஒரு வார்த்தை சொல்லுவார்.

‘டேய்! சும்மா கதைவிடாத!’

அதுதான் கற்பனை சக்தி இன்னும் சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கான சாட்சி.. அவர்கள் நம்பிவிட்டார்கள் என்றால், உங்கள் கற்பனை சக்தி தகுந்த தரத்தில் உள்ளதாக அர்த்தம்.

ஆனால், பொய் மட்டுமே கற்பனை சக்தி கிடையாது. அது ஒரு ஆரம்பம், அவ்வளவுதான். அதையே பொருள்களிடமோ, படைப்புகளிடமோ காட்டும்போது, ஒரு விஷயத்தைப் பார்த்தால், அதற்குச் சம்பந்தமே இல்லாத இன்னொரு விஷயம் தோன்றும். அதுதான் கற்பனை சக்திக்கான அடிப்படை!

இப்போது, இதை வாசிப்பவர்களின் கற்பனை சக்தியை அளக்கலாம்.

ஒரு வட்டம்!


இதைப் பார்த்தால் என்னவெல்லாம் தோன்றுகிறது? உங்கள் பதிலைக் கமென்ட்டாக போடுங்கள். அடுத்த வாரம் சுவாரஸ்யங்களுடன் சந்திப்போம்….

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com