அத்தியாயம் 9 - கற்பனையும் செய்ப்பழக்கம்!

வேலைக்குச் சேர, கல்வித் தகுதி மட்டுமே போதும் என்றுதான் இன்றைய வேலை தேடும் இளைஞர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வே
லைக்குச் சேர, கல்வித் தகுதி மட்டுமே போதும் என்றுதான் இன்றைய வேலை தேடும் இளைஞர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், வேலைத் தகுதி எதையுமே வளர்த்துக்கொள்ளாமல், தினசரி ஏதாவது ஒரு நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது அல்லது, தெரிந்த நண்பர் நம்மை பரிந்துரைப்பார் (RECOMMEND), தொடர்பு கொடுப்பார் (REFERENCE) என்று நம்பி, அந்த கம்பெனி வேலைக்காகவே உட்கார்ந்திருப்பது என்று ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், கல்வித் தகுதிக்கும் மேல், எந்த மாதிரியான அடிப்படைத் திறன்களை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன என்று தெரிந்தால், அதனை வளர்த்துக்கொள்ள விழையலாம். அப்படிப்பட்ட திறன்கள் எவை, அவற்றை எப்படி வளர்த்துக்கொள்வது என்பது பற்றித்தான் கடந்த எட்டு வாரங்களாகப் பார்த்துவருகிறோம்.

முதலில், எப்படித் தயாராவது? சுயவிபரம், மின்னஞ்சல் எப்படி இருக்க வேண்டும்? கவனம் எவ்வளவு அவசியமானது? அதனை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? அடுத்து, கற்பனை சக்தியின் அவசியம் என்ன என்று பார்த்தோம்.

விவரமாகப் படிக்க விரும்புபவர்கள் இதற்கு முந்தைய பாகங்களையும் படித்துவிட்டு வரலாம்.

சென்ற அத்தியாயத்தில், நமது கற்பனை சக்தியோடு தொடர்புடைய உளவியலை அறிய ஒரு வட்டத்தைக் கொடுத்து, அதைப் பார்த்தவுடன் என்ன தோன்றுகிறது என்று கேட்டிருந்தேன்.

இதை வைத்து, உங்களை நீங்களே எடை போட்டுக்கொள்ளலாம்.

வட்டத்தை நினைத்தவுடன் –

உடனே என்ன நினைவுக்கு வருகிறது?

அடுத்தடுத்து எத்தனை பொருள்கள் நினைவுக்கு வருகின்றன?

அப்படி நினைவுக்கு வர எவ்வளவு நேரமாகிறது?

இவையெல்லாம், நமது கற்பனை சக்தியை அளவிட்டுவிடும்.

உடனடியாக, உங்கள் கையில் பயன்படுத்தும் பொருள்கள் நினைவுக்கு வந்தால், (பேனா மூடி, சி,டி, டீ மேட்) – நீங்கள் ஒரு அலுவலக வேலைக்கு உங்களைத் தயார் செய்துவைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

பூஜ்ஜியம் என்ற எண்ணோ, நாணயமோ நினைவுக்கு வந்தால், உங்களுக்கு நிதி சம்பந்தமான துறையில்தான் நாட்டம் என்று அர்த்தம்.

நீங்கள் அன்றாடம் சாலையில் பார்க்கும் பொருள்கள், குறிப்பாக சக்கரம், குடை போன்றவை தோன்றினால், உங்களுக்குப் பயணம் சார்ந்த, வாகனம் சார்ந்த வேலைகளில் நாட்டம் இருக்கும்.

நீங்கள் நினைத்த பொருள் இந்த பூமியிலேயே இல்லை. அதாவது நிலா, சூரியன் போன்றவையாக இருந்தால், நீங்கள் யதார்த்தத்தை மீறி கற்பனையாக நிறைய சிந்திப்பவர். மேலும், உங்களுக்கு ஒரு கனவு வாழ்க்கை எப்போதும் உங்களைத் துரத்தும்.

வட்டத்தைப் பார்த்தவுடன், அது வேறு ஒரு பெரிய பொருளின் ஒரு பாகமாக கேஸ் ஸ்டவ்வின் பர்னர், மீனின் கண், பூவின் நடுப்பகுதி, புகைபோக்கியின் மேல்பகுதி என்று பார்த்தால், நீங்கள் மிகவும் யதார்த்தவாதி, பிரச்னைகளைப் புரிந்துகொள்பவர். அதே சமயம், எல்லாவற்றிலும் அதன் ஆழம் வரை செல்பவர்.

இதையெல்லாம் விடுத்து, வட்டத்தைப் பார்த்தவுடன், இந்த உலகிலேயே இல்லாத, இன்னும் உருவாக்கப்படாத ஒரு பொருளாகவோ, நாம் நினைத்தே பார்த்திராத ஒரு பொருளையோ (உ.ம்., புத்தரின் தலை, வேற்றுக் கிரக மனிதனின் வாய், குண்டூசியின் முனை, கண்ணனின் வாய்க்குள் உலகம், ஒரு சொட்டுத் தண்ணீர் என்று சொன்னார்கள் என்றால், அவர்கள்தான் புதிய கண்டுபிடிப்புகளையும், கற்பனா சக்தி மூலம் படைப்புகளையும் உருவாக்குபவர்களாக ஆவார்கள்.

மேலே கண்ட அனைத்தையுமே கூற முடிந்தால், உங்களால், எதை வேண்டுமானாலும் கற்பனை செய்யமுடியும் என்று எண்ணலாம்.

இவற்றைத் தவிர வேறு சிந்தனை வந்தாலும், அதுதான் கற்பனைக்கு அடிப்படை. அப்படிப்பட்டவர்கள்தான் புதிய பொருள்களை உருவாக்குகிறார்கள்.

இவற்றையெல்லாம் மீறி, இந்த வட்டத்தை, ஒரு குழந்தையிடம் கேட்டுப் பாருங்கள். நாம் சிந்திக்காத கோணத்தில் பதில் சொல்லும். மாத்திரை, பர்த்டே கேக், கிண்டர் ஜாய், பஸ் ஸ்டீயரிங், பிஸ்கட், தோசை, பள்ளிக்கூட கேட்டில் உள்ள டிசைன், ஓ, காட்டுக்குள் யானையைப் பிடிக்கத் தோண்டிய பள்ளம்… இவையெல்லாம். இரண்டாம் வகுப்பு படிக்கும் எனது மகள் ஒரு நிமிடத்துக்குள் சொன்ன பதில்கள்.

இதுதான்…

நமக்கு சிறுவயதில் இருந்த கற்பனை சக்திக்குத் தீனி போடாமல் விட்டுவிட்டு, படித்து முடித்து, வேலைக்குச் செல்லும்போது, திடீரென்று கற்பனை சக்தியைக் கேட்டால் எங்கே போவது? இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. அதனை உடனே வளர்த்துக்கொள்ளலாம்.

ஏனெனில், கற்பனை சக்தி இரண்டு விதங்களில் நமக்குள் வரும். ஒன்று, பிறவியிலேயே கற்பனை வளம் அதிகமாக இருப்பது. இரண்டாவது, நாமே அதனை திரும்பத் திரும்ப, பழக்கத்தில் வளர்த்துக்கொள்வது!!

பழக்கத்தில் வளர்த்துக்கொள்வதுதான், பிறவியிலேயே திறன் உள்ளவர்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும்.

தனக்குக் கற்பனை சக்தி இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் எல்லோருமே, அதனை தன் வாழ்வின் தருணங்களில் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஆகவே, நேர்முகத் தேர்வை அணுகுவதற்கு முன், நாம் பார்க்கும் பொருள்கள் அனைத்திலுமே, ஒரு வடிவத்தைப் பார்க்கலாம். அல்லது, நாம் ஒரு வடிவத்தை மனத்தில் வைத்துக்கொண்டு, அதை நாம் பார்க்கும் பொருள்கள் அனைத்திலுமே தேடலாம். இப்போது, இதனை மூளை பதிந்துவைத்துக்கொள்ளும்.

ஆகவே, மீண்டும் கற்பனை சக்திக்கு வேலை வரும்போது, அது தான் பார்த்த பொருள்களை ஒப்பிட்டுப் பார்த்து, உங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும்.

மேலும், ஒரு கதையைப் படிக்க ஆரம்பித்துவிட்டு பாதியில், இதை நான் எழுதினால் எப்படிக் கொண்டு செல்வேன் என்று சிந்திக்கலாம். அது மொக்கையாகக்கூட இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், இதன்மூலம் உங்கள் கற்பனை வளத்துக்கு ஒரு ஊட்டச்சத்து உரம் போட்டதுபோல் ஆகிவிடும்.

மற்றவர்கள் ஒன்றைச் செய்துவைத்திருந்தால், அதில் உள்ள குறைகளைக் கண்டுபிடித்து பெருமைப்படாமல், அந்தக் குறையைக் களைய இதனை இப்படிச் செய்திருக்கலாம். எப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்ற ரீதியில் சிந்திக்கலாம்.

இதைத்தான் நான் பெட்டியை விட்டு சிந்திப்பது என்று சொன்னேன்.

பெட்டியை விட்டுச் சிந்தித்தால், கற்பனை சக்தி மட்டும் வளராது. இன்னுமொரு முக்கியமான குணமும் சேர்ந்து வளர்ந்துவிடும்.

நேர்முகத் தேர்வுக்கு செல்பவர்களுக்கு அது அடுத்த பிரச்னை!

அதை அடுத்த வாரமே தீர்ப்போம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com