பகுதி 10: கேள்வி – பதில்கள்

பேலியோ டயட் குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு நியாண்டர் செல்வன் பதில் அளிக்கிறார்.

பேலியோ டயட் குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு நியாண்டர் செல்வன் பதில் அளிக்கிறார்.

1. இன்று கிடைக்கும் கோழி (பிராய்லர்) எல்லாம் ஆண்டிபயாடிக் ஊசி போடப்பட்ட, இயற்கை உணவு உண்ணாத கோழிகள். இதை அதிகம் சாப்பிடுவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். மீன் மற்றும் மட்டனும் அப்படித்தான். இதற்கு என்ன செய்வது?

- ஆஷிக் ரஹீம்

கோழி, ஆடு, மாடு என எதுவுமே தன் இயற்கை உணவை இன்று உண்பதில்லை. அனைத்துக்கும் மக்காச் சோளம், சோயா, சோளத்தட்டு போன்ற உணவுகளே வழங்கப்படுகின்றன. கோழிகளுக்கு வியாதி வரக்கூடாது எனும் நோக்கில் ஆண்டிபயாடிக் ஊசி போடப்படுகிறது. மனிதர்களுக்குக் காய்ச்சல், சளி வந்தால் ஆண்டிபயாடிக் ஊசி போடுகிறார்கள் அல்லவா? அதுமாதிரி. இந்த ஊசிகளால் கெடுதல் கிடையாது. ஹார்மோன் ஊசிகளைப் போட்டு வளர்க்கும் மிருகங்களை உண்பது ஆபத்தானது. அதைத்தான் தவிர்க்கவேண்டும். 

அதேசமயம், வியாதிகளைக் குணமாக்கும் நோக்கில் அல்லாமல் கோழிகளின் எடையை அதிகரிப்பதற்காக, அளவுக்கு அதிகமான அளவில் ஆண்டிபயாடிக் ஊசிகள் செலுத்தப்படுவதாகப் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. கோழிகளுக்கு எடையை அதிகரிக்கும் நோக்கில் ஆண்டிபயாடிக் ஊசி போடப்படுகிறதா, எந்தப் பண்ணைகள் அவ்வாறு செய்கின்றன என்பதை அரசு கண்காணிக்கவேண்டும்.

ஆரோக்கியம் & நல்வாழ்வு ஃபேஸ்புக் குழுவில் உறுப்பினராக உள்ள கால்நடை மருத்துவரான ரவி பச்சையப்பன் இது குறித்து கூறுகையில்:

‘கோழிகளுக்கு ஹார்மோன் ஊசிகள் போடுகிறார்கள் எனத் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஹார்மோன்கள் என்பது பெப்டைட் (peptide) எனப்படும் புரதம்; அது எந்த உடலுக்குள் போனாலும் உடனடியாக உடல் ஒருவித தற்காப்புமுறையைக் கையாளும். அப்போது உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து 14 நாள்கள் கழிந்த பின்னரே இயல்பு நிலைக்குத் திரும்பமுடியும். இப்படி இருக்கும் பட்சத்தில் 40 நாள்கள் மட்டுமே வளர்க்கப்படும் கோழிகளுக்கு எப்படி அந்த ஊசியைப் போட முடியும்? மேலும் ஒரு முக்கியமான உண்மை – கறிக்கோழி, முட்டைக் கோழி ஆகிய இரண்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) முன்வைத்தே  முட்டை உற்பத்தி செய்கின்றன. எதிர்ப்பு சக்தி குறையும்போது உற்பத்தி குறையும்.

ஹார்மோன் ஊசி செலுத்தினால் எதிர்ப்பு சக்தி குறைவதோடு கோழிகள் இறக்கவும் நேரிடும். அதனால் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசிகள் போடப்படுவதில்லை’ என்கிறார்.

அதனால் நல்ல முறையில் பண்ணையில் வளர்க்கப்படும் கோழி, ஆடு போன்றவற்றை உண்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. அதேசமயம் தெருவில் கண்டதைத் தின்று வளரும் நகர்ப்புறப் பிராணிகளான கோழி, மாடு, பன்றி போன்றவற்றை உண்பதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில், தெருவில் உள்ள குப்பை, கழிவுகள் ஆகியவற்றை உண்டால் அவற்றின் உடலில் ஏராளமான நோய்த்தொற்றும், வியாதிகளும் பரவிவிடும். அதை வீட்டுக்குக் கொண்டு வந்து கழுவி, சமைத்தால் அந்த நோய்த்தொற்று நம்மையும் பாதிக்கும்.

2. இந்தத் தொடரின் ஓர் இடத்தில் பேலியோ சேலட் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். பேலியோ சேலட் என்றால் என்ன? 

- ஜெகதீசன்

பேலியோ சாலடில் கீரை, முட்டைகோஸ், வெள்ளரி, காளிபிளவர், பிராக்களி, (சிறிதளவு) காரட், செலரித்தண்டு, குடைமிளகாய், தக்காளி, வெங்காயம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். சாலடின் மேலே ஆலிவ் ஆயில் அல்லது செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், வினிகர் மற்றும் எலுமிச்சம் பழச் சாற்றை ஊற்றி உண்ணலாம். சைவர்கள் அதில் அவகாடோ அல்லது தேங்காய்த் துண்டுகளையும் அசைவர்கள் முட்டை அல்லது சிக்கன் துண்டுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

3. பேலியோ காய்கறிகள் என்றால் என்ன? 

- ராமலிங்கம் இராஜராஜன்

காளிபிளவர், பிராக்களி (Broccoli), முட்டைகோஸ், பாகற்காய், காரட், பீட்ரூட், தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய், கத்திரிக்காய், சுண்டைக்காய், வாழைத்தண்டு, அனைத்துவகைக் கீரைகள், முருங்கை, ஆஸ்பாரகஸ் (Asparagus, அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த காய்கறி வகை. குச்சி போன்று இருக்கும்.), ருபார்ப் (Rhubarb, இளவேல் சீனி), ஆலிவ், செலரி (செலரிக்கீரை), வெள்ளரி, குடைமிளகாய், பச்சை, சிகப்பு மிளகாய், பூசணி, காளான், தேங்காய், எலுமிச்சை, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, மஞ்சள் கிழங்கு, அவகாடோ (Avocado),புடலங்காய் போன்றவை பேலியோ காய்கறிகளில் அடங்கும்

4. சைனஸ் பிரச்னைக்கு பேலியோவில் தீர்வு உண்டா?

- பார்வதி

உண்டு. சைனஸ் வர ஒரு முக்கிய காரணம் புல் அலர்ஜி. கோதுமை, அரிசி போன்ற தானியங்கள் எல்லாமே புல் வகையைச் சேர்ந்ததுதான். அவற்றை நிறுத்தினால் சைனஸும் மறைந்துவிடும். பல ஆண்டுகளாக என்னை வாட்டி வந்த சைனஸ் வியாதி, பேலியோவினால்தான் அகன்றது. எங்கள் ஃபேஸ்புக் குழுவில் உள்ள பலரும் சைனஸில் இருந்து பேலியோவால் விடுதலை பெற்றுள்ளார்கள்.

5. நமது உடல் அசைவ உணவுகளையே ஜீரணிப்பதற்கு ஏற்றதாக உள்ளது. அசைவ உணவில் கேடுவிளைவிக்கும் மாவுச்சத்து இல்லை. உண்மை இவ்வாறாக இருக்கும்போது, அசைவ உணவு குறித்து ‘தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்’ என திருக்குறளில் கூறப்பட்டுள்ளது ஏன்? 

- இராமநாராயணன்

நம் உடல் அசைவ உணவை ஜீரணிக்க ஏற்றது அல்ல என்று சிலர் கூறுவது தவறான கருத்து. மனித உடலால் ஜீரணிக்க முடியாதது நார்ச்சத்து மாத்திரமே. நார்ச்சத்து தாவர உணவுகளில் மட்டுமே உண்டு. அசைவ உணவில் துளியும் கிடையாது. மேலும் நாம் உண்ணும் உணவு அனைத்தும் முதலில் சிறுகுடலுக்கே செல்லும். அதில் புலால் உணவு மட்டுமே சிறுகுடலால் முழுமையாக ஜீரணிக்கப்படும். சிறுகுடலால் ஜீரணம் செய்ய இயலாத நார்ச்சத்து கொண்ட தாவர உணவுகள், தானியங்கள் முதலானவை பெரும்குடலுக்குச் சென்று அங்கேயும் ஜீரணமாகாமல் வாயு, வயிற்றுவலி முதலான உபாதைகளை ஏற்படுத்தி கழிவில் கலந்து வெளியேறும்.

அடுத்து வள்ளுவர் புலால் மறுத்தல் எனும் அதிகாரத்தில் பத்து குறள்களை எழுதி புலால் மறுத்தல் எனும் கருத்தை வலியுறுத்துகிறார். ஆனால் புலால் மறுத்தல் அதிகாரம், துறவறவியலில் மாத்திரமே வருகிறது. அவாவறுத்தல், துறவு போன்ற அதிகாரங்களும் துறவறவியலில் வருகின்றன.

இல்லறம் நடத்தும் மக்களுக்கு அவாவறுத்தல் (ஆசையை அறுத்தல்), துறவு, புலால் மறுத்தல் போன்றவை எப்படிப் பொருந்தும்? அதனால் புலால் மறுத்தல் துறவிகளுக்கான அறமாகவே வள்ளுவரால் கூறபட்டது என்பது தெளிவு. இல்லறத்தில் ஈடுபடுபவர்கள் புலால் உண்ண வேண்டாம் என்று வள்ளுவர் கூறவில்லை.

திருக்குறளில் இன்னொரு இடத்தில் வள்ளுவர் கூறுகிறார்:

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது

அதாவது, ‘முயலை வேட்டையாடி ஜெயிப்பதைவிட யானையை வேட்டையாடித் தோற்பது நல்லது’ எனக் கூறுகிறார். யானையை வேட்டையாடக் கூறும் வள்ளுவர் எப்படி சைவ உணவு நெறியை இல்லறத்தில் ஈடுபடுபவர்களுக்கு வலியுறுத்த முடியும்? அப்படிக் கருதுவதாக இருந்தால் இல்லறத்தார் ஆசையை விட்டொழிக்க வேண்டும், துறவு பூணவேண்டும் என்றும் அல்லவா கூறவேண்டும்? அதன்பின் சமூகம் எங்ஙனம் இயங்கும்?

6. நீங்கள் பேலியோ உணவுமுறைக்கு எப்படி மாறினீர்கள்? உங்கள் அனுபவம் என்ன?

- செந்தில்

என் அப்பா, தாத்தா, பாட்டி ஆகியோருக்குச் சர்க்கரை நோய் உண்டு. தாத்தா டிமென்ஷியா என்கிற மறதி நோயால் மரணமடைந்தார். அதனால் எனக்கும் சர்க்கரை நோய் வரலாம் என்கிற அச்சம் இருந்தது. அதேபோல 39-வது வயதில், ப்ரி டயபடிஸ் எனும் சர்க்கரை நோய் எனக்கு இருப்பதை அறிந்தேன். ரத்தச் சர்க்கரை அளவுகள் 125 எனும் அளவை எட்டின. ரத்த அழுத்தம் 130/85. எடை 90 கிலோவைத் தொட்டது.

உடற்பயிற்சி மூலம் என் வியாதிகளை விரட்டலாம் என எண்ணி பளுதூக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டேன். பிறப்பு முதல் சைவம் என்பதால் கோதுமை, கொழுப்பெடுத்த பால், பருப்பு, சோயா போன்ற உணவுகளைக் கொண்ட குறைந்த கொழுப்பு டயட்டுகளையும் பின்பற்றினேன்.

இந்தச் சூழலில் அமெரிக்காவுக்கு வந்தபோது பாடிபில்டிங் தொடர்புடைய நூல்களைப் படித்தேன். அவற்றில் இறைச்சியும், முட்டையும் உடலுக்கு நல்லது என எழுதியிருந்தது. நூல்கள், ஆவணப் படங்கள் ஆகியவற்றின் உதவியுடன் பேலியோ டயட் பற்றி மேலும் தெரிந்துகொண்டேன். 

பரிசோதனை முயற்சியாக தானியம் இல்லாத சைவ பேலியோவைப் பின்பற்றத் தொடங்கினேன் (நான்தான் அசைவம் தொடமாட்டேனே!) நல்ல முன்னேற்றம் தெரிந்தாலும் சைவ பேலியோவில் தானியம் இல்லாததால் பசி வாட்டி எடுத்தது. எனக்குச் சிறுவயது முதல் அடிக்கடி வாய்ப்புண் உண்டாகும். ஓரிரு நாள் பால் குடிக்காவிட்டாலும் இப்பிரச்னை ஏற்படும். இதற்குக் காரணம் பி12 பற்றாக்குறையே என்பதை அறிந்தேன். உடற்பயிற்சி செய்யும்போது அதன் புரதத் தேவைகளை சைவ டயட்டால் பூர்த்தி செய்ய முடியாது என்பதையும் புரிந்துகொண்டேன்.

உணவுப் பழக்கத்தை மாற்றவேண்டும் என முடிவெடுத்தேன். மனதைரியத்தை வரவழைத்துக்கொண்டு என் 40-வது பிறந்தநாளில் அசைவ பேலியோ உணவுமுறைக்கு மாறினேன். அதன்பின் என் வியாதிகள், வலிகள், உடல்பருமன் போன்றவை என்னை விட்டு அகன்றன. வாய்ப்புண், வயிற்றுவலி, சிறுவயது முதல் இருந்த சைனஸ் எல்லாமே போன இடம் தெரியவில்லை. இப்போது பேலியோவைத் தவிர்த்த வேறொரு உணவுமுறையை என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.

ஆரம்பத்தில் பேலியோ பற்றி தெரிந்தபிறகும் ஒரு வருடம் அதில் இறங்கும் துணிச்சல் எனக்கு வரவில்லை. அதனால் பேலியோவை சந்தேகத்துடன் பார்ப்பவர்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை நம்புவதை விடவும் தென்னை மரத்தையும் பசுவையும் நம்பலாம். நம் முன்னோர் உண்ட இறைச்சி, முட்டை, பால் போன்ற உணவுகளை உண்பதால் எந்தக் கெடுதலும் வராது. கேரளாவில் தேங்காய் எண்ணெயில் தான் சமைக்கிறார்கள். ஆரோக்கியமாகத் தானே இருக்கிறார்கள்!

பேலியோ டயட்டைப் பின்பற்றும் முன்பு மெடிக்கல் டெஸ்ட் ஒன்றை எடுத்து உங்கள் ரத்தச் சர்க்கரை அளவுகள், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. அதற்கேற்றபடி உணவைப் பரிந்துரைக்க உதவும். மற்றபடி பேலியோ டயட், இயற்கை உணவைச் சார்ந்தது என்பதால் எந்த உடல்நிலையில் இருப்பவரும் எந்த வயதினரும் இதைக் கடைப்பிடிக்கலாம்.

7. நீங்கள் தினமும் நிறைய கொழுப்பு உணவுகள் சாப்பிடுவதை உங்கள் ஃபேஸ்புக் பக்கம் மூலமாக அறிகிறேன். என்னதான் பேலியோ டயட்டில் இருந்தாலும் எடை குறைந்தபின்னும் இவ்வளவு கொழுப்பு சாப்பிடுவது குறித்து உங்களுக்குக் கொஞ்சம்கூட பயமே இல்லையா?

- செந்தில்

நிச்சயமாக இல்லை. என்றாவது வெளியூர் போகும்போது பேலியோ டயட்டைத் தொடரமுடியாமல் இருந்தால், எப்போது மீண்டும் பேலியோவுக்குத் திரும்பி இறைச்சியையும், முட்டையையும் உண்போம் என மனம் ஏங்கும். அந்த அளவுக்கு உடலும் உள்ளமும் பேலியோ உணவுமுறைக்குப் பழகிவிட்டன. பேலியோவைப் பின்பற்றும் இந்த 3 வருடங்களில் சளி, காய்ச்சல் என எவ்விதச் சிறுதொல்லையும் ஏற்பட்டதில்லை. மருந்து மாத்திரையையும் தொட்டதில்லை. மிகுந்த ஆரோக்கியமாகவும், மன அமைதியுடனும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இதற்குக் காரணம் பேலியோ உணவே எனத் திடமாக நம்புகிறேன்.

8. சம்பா கோதுமை (முழு கோதுமை) கஞ்சி சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதில்லை. பசியும் கட்டுக்குள் உள்ளது. இதைச் சாப்பிடலாமா?

- ஆஷிக் ரஹீம்

எம்மெர் (Emmer) எனப்படும் சம்பா கோதுமை, தொன்மையான உணவுப் பொருள். தொன்மையான ஐன்கார்ன் கோதுமை (Einkorn wheat) மற்றும் காட்டரிசியின் கலப்பினம்தான் இது. இதன் அறிவியல் பெயர் - Triticum dicoccum.

பண்டைய காலத்தில் பயிரிடப்பட்ட சம்பா கோதுமையின் உயரம் மனிதர்களின் உயரத்தை விடவும் அதிகமாக இருக்கும். எகிப்திய பழங்காலக் கோதுமையை இன்னமும் பரிசோதனை முறையில் சில இடங்களில் வளர்கிறார்கள். அதன் புகைப்படத்தையும் இந்தியாவில் வளர்க்கப்படும் குட்டைக் கோதுமையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!

நீளமான பயிராக இருந்த கோதுமையை ஆய்வுக்கூடத்தின் உதவியுடன் குட்டைக் கோதுமையாக மாற்றியபின் அது மோசமான தானியமாக மாறிவிட்டது. கோதுமையில் இருக்கும் புரதமான க்ளூட்டன் (Gluten), சுமார் 20 முதல் 30% பேருக்கு அலர்ஜியையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. கோதுமையில் ஏ, பி, டி (A,B,D) என மூன்று வகை ஜினோம்கள் (Genome) உண்டு. அதில் டி ஜெனோமை ஆய்வுக்கூடத்தில் மாற்றிவிட்டார்கள். இதனால் கோதுமை விஷமாகிவிட்டது. விஷம் என்பது மிகை இல்லை. க்ளூட்டன் அலர்ஜி இருப்பவர்களுக்குக் கோதுமை கடும் பாதிப்பு ஏற்படுத்தும். தமக்கு க்ளூட்டன் அலர்ஜி இருப்பதேகூடத் தெரியாமல் அதன் விளைவுகளை அனுபவிப்பார்கள். எடை ஏறும், தலை சுற்றும், சர்க்கரை நோய் ஏற்படும், பெண்களுக்கு மாதவிலக்குக் கோளாறுகள் உண்டாகும்.

பாரம்பரியமான சம்பா கோதுமையில், குட்டைக் கோதுமை அளவு பாதிப்பு இல்லை. குட்டைக் கோதுமை அளவு அதில் ரத்தச் சர்க்கரை அளவுகள் ஏறுவதும் இல்லை. குட்டைக் கோதுமை நம் ஜீரண உறுப்புக்களைப் பாதிப்படைய வைக்கும் அளவுக்கு சம்பா கோதுமை இல்லை.

ஆனால், அந்தப் பாரம்பரிய சம்பா கோதுமை இப்போது பயிரிடப்படுவது இல்லை. இப்போது உள்ள சம்பா கோதுமை வகையும் குட்டைக் கோதுமை வகைதான். இதற்குக் காரணம், நம் இந்திய அரசுதான். 1995-96ல், DDK 1000, DDK 1029 என இரு புதிய சம்பா ரகக் கோதுமை வகைகளை அரசு அறிமுகப்படுத்தியது. கர்நாடகாவில் நடந்த ஓர் ஆய்வின் முடிவில், DDK 1001 எனும் குட்டைச் சம்பா கோதுமையையும் பிறகு அறிமுகம் செய்தது. சமீபத்தில் DDK 1009 என்கிற இன்னொரு சம்பா கோதுமை வகையும் அறிமுகமாகியுள்ளது. இது இலைப்புழுவை எதிர்க்கும் வண்ணம் மாற்றம் செய்யப்பட்ட மரபணுக்களைக் கொண்ட கோதுமை. இதுவும் டி ஜெனோமைக் கெடுத்து, நாசம் செய்து உருவானதுதான்.

சம்பா கோதுமையில் பல வகைகள் உள்ளன. பாரம்பரியமான நீளமான சம்பா கோதுமையைப் பயிரிடுபவர்கள் இன்னும் இருக்கலாமோ என்னவோ? ஆனால் நம் அரசு இந்தப் புதிய வகை சம்பா கோதுமை வகைகளைப் பயிரிடச் சொல்லி விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது. குட்டைக் கோதுமை வேகமாக வளர்ந்து மகசூல் கொடுக்கும் என்பதால் விவசாயிகளும் இந்தப் புதியவகை கோதுமையை அதிகம் பயிரிடுகிறார்கள். ஆக, சம்பா கோதுமை மாவு என பாக்கெட் லேபிலிள் இருந்தாலும் அதனுள் இருப்பது பாரம்பரிய எம்மெர் கோதுமையா அல்லது DDK 1009, DDK 1001 கோதுமை வகைகளா என எப்படிக் கண்டுபிடிப்பது?

9. பேலியோ டயட்டைப் பின்பற்றும் நோயாளிகள் கெடொசிஸ் எனும் நிலைக்கு சென்று விடுவார்கள். கெடொசிஸை நீண்டநாள் பின்பற்றினால் கிட்னியில் கற்கள் வரும், எடை இழப்பும், எலும்பு இழப்பும் நிகழும். கெடொ - அசிடோசிஸ் எனும் ஆபத்தான நிலைக்கும் நோயாளிகள் செல்வார்களா?

- ஜி. ஸ்ரீதரன்

முதலில் கெடொசிஸுக்கும், கெடொ - அசிடோசிஸுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டின் பெயரும் ஒரே மாதிரி இருப்பதால் இரண்டும் ஒன்று ஆகிவிடாது. மணத்தக்காளி கீரையின் பெயரும், தக்காளியின் பெயரும் ஒரே மாதிரி இருப்பதால் இரண்டும் ஒன்று ஆகாது அல்லவா? அதேபோல.

கெடொசிஸ் என்பது உடல், சர்க்கரையை (க்ளுகோஸ்) எரிபொருளாகக் கொண்டு இயங்காமல் கொழுப்பை (கீடோன்கள்) எரிபொருளாகக் கொண்டு இயங்குவதைக் குறிப்பது. மனித மூளை க்ளுகோஸில் இயங்குவதைக் காட்டிலும் கீடோனில் மிகச் சிறப்பான முறையில் செயல்படும். மூன்று நாளுக்கு மேல் உண்ணாவிரதம் இருக்கும் அனைவர் உடலும் கீடோனில்தான் இயங்குகிறது.

சிங்கம், புலி என அசைவம் உண்ணும் மிருகங்கள், கெடொசிஸ் நிலையில்தான் இருக்கும். மிக வேகமாக ஓடும் மிருகம் என சிறுத்தையைக் கூறுகிறோம். அதன் உணவு முழுக்க முழுக்க புலால்தான். எனவே அதுவும் ஆயுள் முழுக்க கெடொசிஸில் இருக்கும் வாய்ப்பே அதிகம். அலாஸ்கா, கனடா பகுதிகளில் வாழும் எஸ்கிமோக்களும் வருடம் முழுக்க மாமிச உணவையே உண்பதால் அவர்களும் ஆண்டு முழுக்க கெடொசிஸ் நிலையில்தான் இருப்பார்கள் என அறியலாம்.

ஆக உணவு மூலம் கெடொசிஸ் நிலையை அடைவதாலும், நீண்டநால் கெடொசிஸில் இருப்பதாலும் நமக்குக் கெடுதல் எதுவும் கிடையாது.

கெடொ - அசிடோசிஸ் என்பது சர்க்கரை நோய் முற்றிய நிலையில் உடலால் சுத்தமாக இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் போகும்போது கீடோன்கள் அதிக அளவில் ரத்தத்தில் தேங்குவதால் உருவாவது. இதனால் மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி, உடல் வலி ஏன் சில சமயம் மரணம்கூட நிகழலாம்.

பேலியோ உணவு முறையால் ஒருவருக்கு கெடொ – அசிடோசிஸ் நிலை ஏற்படாது. அது சர்க்கரை நோய் முற்றியபின் வருவது. தானிய உணவு, தென்னிந்திய உணவு போன்றவற்றை உண்பவர்களுக்கே பெரும்பாலும் கெடொ - அசிடோசிஸ் ஏற்படுவதைக் காண்கிறோம். முன்பே கூறியதுபோல இரு பெயர்களும் ஒன்றாக இருப்பதை வைத்து இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

பேலியோ உணவில் மாவுச்சத்தின் அளவு 20 கிராம் எனும் அளவுக்குக் குறைந்தால்தான் கெடொசிஸ் நிலை உண்டாகும். 30, 40 கிராம் எனும் அளவில் மாவுச்சத்து இருந்தால் கெடொசிஸ் நிலைக்குச் செல்லமாட்டோம்.

கெடொசிஸில் தொடர்ந்து வருடக்கணக்கில் இருப்பது நம்மைப் போன்ற நகர்ப்புற மனிதர்களுக்குச் சாத்தியமில்லாத விஷயம். தீபாவளி, பொங்கல், பிறந்தநாள், சனி, ஞாயிறு என ஏதோ ஒரு காரணத்தை வைத்து ஒரு சின்ன இட்லியோ, தோசையோ, மாவுச்சத்து உள்ள பழமோ எதாவது வாய்க்குள் போனாலே அடுத்த வினாடி கெடொசிஸ் நிலை மறைந்துவிடும். மேலும், நாம் அன்றாடம் பல் துலக்கும் பற்பசையில் கூட கலோரிகளும், மாவுச்சத்தும் உள்ளன. மருந்து, மாத்திரைகளை எடுத்தால் அதில்கூட சுகர் கோட்டிங் (sugar coating) எனச் சொல்லி சர்க்கரையைக் கலந்தே கொடுக்கிறார்கள். இதெல்லாமே கெடொசிஸைக் கெடுக்கும் காரணிகளாகும். ஆண்டுக்கணக்கில் தினமும் 20 கிராமுக்கும் குறைவாக மாவுச்சத்து உள்ள உணவை உண்பது சுத்தமாக காய்கறிகளே விளையாத துருவப் பகுதி மக்களுக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம்.

 10. சைவ பேலியோ டயட் பற்றி கூறமுடியுமா? அசைவம் சாப்பிடாமல் இருப்பதால் பலன்கள் குறையுமா?

- ராஜூ

உங்களைப் போல பலரும் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார்கள். அடுத்த வார அத்தியாயத்தில் சைவ பேலியோ டயட் குறித்து விளக்கமாக எழுதுகிறேன்.

(கேள்விகளை அனுப்பிய வாசகர்களுக்கு நன்றி. வாசகர்கள் பலரும் தனிப்பட்ட முறையில் அவர்களுடைய நோய்களைக் குறிப்பிட்டு டயட் கேட்டுள்ளார்கள். அவர்களை, ஆரோக்கியம் & நல்வாழ்வு ஃபேஸ்புக் குழுமத்தில் இணையும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.)

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com