லிண்டா 'உங்க பெரியதாத்தாவை எரிச்சாங்களா, அடக்கம் பண்ணினாங்களா?' என்றாள்.
'அடக்கம் பண்ணினாங்க' என்றான். ஊருக்கு வெளியே ஒரு உடைமரக்காட்டில் நடுவே இரு கல்லறைகள் இருக்கின்றன என்பதையும், அங்கு செல்லியாத்தா சில நாட்கள் சென்று வருவாள் என்பதும் அவன் அறிந்திருந்தான். செல்லியாத்தா எப்போது போகிறாள், வருகிறாள் என்பது பலருக்கும் தெரியாது. சற்றே மரை கழண்ட கேஸ் என்பதால் செல்லியாத்தாவைப் பற்றி குடும்பத்திலேயே அதிகம் எவரும் கண்டுகொள்வதில்லை.
ஒவ்வொரு இடமாக லிண்டாவுடன் சுற்றியதில், நடுநடுவே ஆனி பற்றி அவள் சொல்லி வந்திருந்தாள். அன்று, ஏதோ விவரமாகச் சொல்லும் மூடில் இருந்தாள். குளிர்பானம் ஒன்றை உறிஞ்சியபடி ஆனி பற்றி மெல்லச் சொல்ல ஆரம்பித்தாள்.
- தொடரும்