கடையநல்லூரில் பள்ளிவாசல் ஒன்று கட்டுவது தொடர்பான பிரச்னையில் இரு தரப்புக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் படுகாயம் அடைந்தார்.
கடையநல்லூரில், பேட்டை ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இதற்கு அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறுவர் சிறுமியர் அரபி பாடசாலை என்ற பெயரில் துவக்கப் போவதாகச் சொல்லி, பள்ளிவாசல் ஒன்று கட்டும் முனைப்பில் இருந்தார்களாம். இது தொடர்பாக இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் இருந்துவந்தது. இன்று இரு தரப்பையும் சேர்ந்த நூற்றுக் கணக்கானவர்கள் கம்பு, கற்களால் தங்களுக்குள் தாக்கிக் கொண்டனர்.
இதில் பாதுகாப்புக்காகச் சென்ற போலீஸார் மீதும் கற்கள் விழுந்தன. இந்தத் தாக்குதலில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இசக்கி என்பவர் காயம் அடைந்தார். அவர் உடனடியாக கடையநல்லூர் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், இரு தரப்பிலும் சேர்ந்த 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதை அடுத்து, திருநெல்வேலி மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதரி உள்ளிட்ட காவல் உயரதிகாரிகள் அந்த இடத்தில் முகாம் இட்டனர். இது தொடர்பாக, இருபதுக்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.