மைசூர் அரசு குடும்ப வாரிசு ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரின் உடல் அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.
மைசூர் அரச குடும்பத்தின் வாரிசு ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார்(60) பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் காலமானார். தனியார் மருத்துவமனையிலிருந்த அவரது உடல் சிறப்பு வாகனத்தில் இரவு கொண்டு செல்லப்பட்ட மைசூர் அரண்மைனையில் உள்ள திருமண மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. புதன்கிழமை காலை முதல் உறவினர்கள், பொதுமக்கள் அவரது உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், சீனிவாசபிரசாத், மகாதேவ் பிரசாத், மகாதேவப்பா, அம்பரீஷ், உமாஸ்ரீ ஆகியோர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். பிற்பகல் 3.30 மணியளவில் அவரது உடல் தங்க அம்பாரியில் கொண்டு செல்லப்பட்டு நஞ்சுன்கூடுசாலையில் உள்ள மனுவனத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரின் மூத்த சகோதரி காயத்ரிதேவியின் புதல்வர் காந்தராஜ் (36) தீ மூட்டினார்.
இறுதிச்சடங்கில் முன்னாள் பிரதமர் தேவகௌடா, முன்னாள் முதல்வர் எடியுரப்பா, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜவகல்ஸ்ரீநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.