ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் அருகே கண்மாய் மண்ணை அரசு அனுமதியின்றி வெட்டி, இன்று(வெள்ளிக்கிழமை) காலையில் கடத்தியதாக செங்கல் சூளை அதிபர் மற்றும் 3 வாகன ஓட்டுனர்களை போலீஸார் கைது செய்தனர்.2 டிப்பர் லாரிகள், 1 ஜேசிபி வாகனம் ஆகியவை பறிமுதல் ஆயின.
அபிராமத்தைச் சேர்ந்தவர் ராமு மகன் மூர்த்தி(46). இவர் அபிராமம் பகுதியில் சேம்பர் செங்கல் சூளை வைத்துள்ளார். இதற்கு பார்த்திபனூர் அருகே மாங்குடி என்ற ஊர் பகுதியில் கண்மாய் நீர்ப்பிடிப்பு மண்ணை அரசு அனுமதியின்றி வெட்டிக் கடத்துவதாக பார்த்திபனூர் காவல் நிலையத்தில் வழிமறிச்சான் கிராம நிர்வாக அலுவலர் பூப்பாண்டியன் புகார் செய்தார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என்.மயில்வாகணன் உத்தரவில், உதவி காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் மேறப்பார்வையில் காவல் ஆய்வாளர் கண்ணன், சார்பு ஆய்வாளர்கள் சல்மோன், பழனி, மலைராஜ், பாஸ்கரன் ஆகியோர் போலீஸாருடன் சென்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கண்மாய் நீர்ப்படிப்பு மணலை, ஜேசிபி எந்திர வாகனத்தைப் பயன்படுத்தி வெட்டி 2 டிப்பர் லாரிகளில் ஏற்றிக் கொண்டிருந்ததைப் போலீஸார் பார்த்தனர். இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று வாகனங்களைச் சுற்றி வளைத்து கைப்பற்றினர். பின்னர் செங்கல் சூளை அதிபர் மூர்த்தி, டிப்பர் லாரிகளின் ஓட்டுனர்கள் அபிராமம் சுப்பிரமணியன் மகன் நாகராஜன்(25), விரதக்குளம் பழனிச்சாமி மகன் ராஜீவ் காந்தி(28), ஜேசிபி ஓட்டுனர் புல்லந்தை கந்தசாமி மகன் பிரபு(23) ஆகியோரை போலீஸார் கைது செய்து பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். நால்வரையும் 15 நாள் காவலில் வைக்கும்படி குற்றவியல் நடுவர் ரேவதி உத்தரவிட்டார்.