தலைமை நீதிபதியாக சதாசிவம் நியமனம்: கருணாநிதி வாழ்த்து

சுமார் அறுபதாண்டுகளுக்குப் பிறகு, தமிழர் ஒருவர் இந்திய உச்ச நீதி மன்றத்தின் நாற்பதாவது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க இருப்பதா
தலைமை நீதிபதியாக சதாசிவம் நியமனம்: கருணாநிதி வாழ்த்து

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

சுமார் அறுபதாண்டுகளுக்குப் பிறகு, தமிழர் ஒருவர் இந்திய உச்ச நீதி மன்றத்தின் நாற்பதாவது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க இருப்பதாக இன்று அனைத்து ஏடுகளிலும் வெளிவந்துள்ள செய்தி, தமிழர்களுக் கெல்லாம் தனிப்பெரும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். நீதியரசர் சதாசிவம் அவர்களை மனதார வாழ்த்துகிறேன். அவர் சென்னை உயர் நீதி மன்றத்தின் நீதிபதியாகவும், உச்ச நீதி மன்றத்தின் நீதி பதியாகவும் சிறப்புறப் பணியாற்றி பேரும் புகழும் பெற்றதைப் போல; உச்ச நீதிமன்றத் தலைமை நீதி பதியாகவும் திறம்பட பணியாற்றி, தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் மேலும் பெருமை சேர்க்க வேண்டு மென்ற என்னுடைய விழைவினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மிகச் சிறிய கிராமம் ஒன்றில், கழக ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் ஒன்று என்று அறிவிக்கப்பட்ட கொங்கு வேளாளர் சமுதாயத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பள்ளி இறுதி வரை தமிழைப் பயிற்சி மொழியாகக் கொண்டு கல்வி பயின்று, சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று, 1973ஆம் ஆண்டு தன்னை ஒரு வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி, பின்னர் சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாகவும் பொறுப்பேற்று, 2007ஆம் ஆண்டு தமிழகத்தில் கழக ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது தான் உச்ச நீதி மன்றத்தின் நீதிபதியாக டெல்லி சென்றார்.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் நீதியரசர் சதாசிவம். தமிழகத்தில் கழக அரசினால் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் கேள்விக் குறியாக்கப்பட்டு, நீதி மன்றத்திலே அது பற்றிய வழக்கு நடைபெற்ற போது, கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற மாணவர்களுக்கும் இருந்த வேறு பாட்டினை அகற்றி, வசதி படைத்தவர்களுக்கும், வசதி குறைவான ஏழை-எளிய நடுத்தரக் குடும்பத்து மாணள வர்களுக்கும் ஒரேவிதமான கல்வியை அளிக்க வழிவகை செய்யும் அந்தச் சட்டம் செல்லுபடியாகும் என்ற வரலாற்றுத் தீர்ப்பினை அளித்த பெருமைக்குரிய வரும் நீதியரசர் சதாசிவம் தான். அவர் தற்போது உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக வரும் ஜூலைத் திங்கள் 19ஆம் தேதியன்று பொறுப்பேற்கவிருப்பதை அறிந்து தமிழன் என்ற முறையில் அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com