கச்சத் தீவை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும் : முதல்வர்

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை காக்க வேண்டும் என்றால், மத்திய அரசு கச்சத் தீவை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
கச்சத் தீவை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும் : முதல்வர்

சென்னை

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை காக்க வேண்டும் என்றால், மத்திய அரசு கச்சத் தீவை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

3.5.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இந்திய நாட்டிற்குச் சொந்தமான கச்சத் தீவு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை 1974-ஆம் ஆண்டைய இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி இலங்கை நாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டதை திரும்பப் பெற விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை, தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்திலிருந்து 10 மைல் தொலைவில் 285 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தீவு கச்சத் தீவு.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வரை ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த கச்சத் தீவு, சுதந்திரம் அடைந்த பின்பு, இந்திய நாட்டுடன் இணைக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஏற்படும் வரை, தமிழக மீனவர்கள்  பாக் ஜலசந்தி பகுதியில், கச்சத் தீவு பகுதியில் மீன் பிடித்து வந்தனர். 1974 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை ஒப்பந்தத்திலும் பாரம்பரிய மீன் பிடி உரிமைகள் இந்திய மீனவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன.  இருப்பினும், இந்திய மீனவர்கள்  பாக் ஜலசந்தி பகுதியில் கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கவோ, கச்சத் தீவில் ஓய்வெடுக்கவோ, இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதில்லை. 

எல்லை மீறினார்கள் எனத் தெரிவித்து இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.  பல சமயங்களில் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பல நேர்வுகளில் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் அத்து மீறல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வு கச்சத் தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இலங்கை நாட்டிடம் இருந்து திரும்பப் பெறுவதே என்பதால், இது குறித்த முக்கிய தீர்மானத்தை இப்பேரவையில் முன்மொழிய விழைகிறேன்.

தீர்மானம்

“தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் கொடூரத் தாக்குதல்களும், துன்புறுத்துதல்களும், சிறை பிடிக்கும் நிகழ்வுகளும் தொடர்வதைக் கருத்தில் கொண்டும், பெருபாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கச்சத் தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது சட்டப்படி செல்லத் தக்கது அல்ல என்பதாலும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை நாட்டிற்கு ஒப்படைக்கப்பட்ட கச்சத் தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்துகிறது” என்னும் தீர்மானத்தினை முன்மொழிகிறேன் என்று கூறினார்.

பதிலுரை

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஏழு முறை இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு, சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களில் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களது உடைமைகள் இலங்கைக் கடற்படையினரால் நாசம் ஆக்கப்பட்டன. இவர்களில் 30 மீனவர்கள் இன்னமும் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இது தவிர, 5 தமிழக மீனவர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், தமிழக மீனவர்களைக் காக்க கச்சத் தீவினை மீட்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதால், கச்சத் தீவினை மீட்கும் தீர்மானத்தினை நான் முன்மொழிந்துள்ளேன்.

மீனவர்களின் நலன் காக்கும் இந்தத் தீர்மானத்தினை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டு அமைகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com