தமிழகத்தின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் மே 29ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவலை படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஏப்ரல் 15 முதல் மே 29 வரை 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலை படகுகள் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இத்தடையை மீறுவோர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு சம்பந்தப்பட்ட விசைப்படகின் இழுவலை படகின் பதிவு ரத்து செய்யப்படுவதுடன் மானிய டீசலும் வழங்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார் ஆட்சியர்.