இலங்கைத் தமிழர்களுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை என்று, சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல், அரசு நிர்வாகத் துறை தலைவரும், எழுத்தாளருமான ராமு மணிவண்ணன் தெரிவித்தார்.
போர்க் குற்றங்கள், இனப்படு கொலைகளுக்கு எதிரான அமைப்பு சார்பில் பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர் ராமு மணிவண்ணன் எழுதியுள்ள ஆங்கில நூல் வெளியிடப்பட்டது.
பின்னர், நிகழ்ச்சியில் ராமு மணிவண்ணன் பேசியது:
இலங்கையில் 2009-இல் நடைபெற்ற போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்தப் போரில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை என்பது வேதனையான உண்மை.
தங்களது சொந்த நாட்டிலேயே இலங்கைத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன.
இலங்கையில் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை கவுன்சிலை தீர்மானம் வலியுறுத்தியது. ஆனால், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமாக விசாரிக்கும் நடவடிக்கை இன்னும் தொடங்கப்படவில்லை.
இலங்கையில் நடைபெற்ற போரில் அந்த நாட்டு ராணுவம் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இனப்படு கொலைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது அடக்குமுறை என்று கூறுவது சரியல்ல. 1948-ஆம் ஆண்டு முதல் அரசியல் உள்நோக்கத்துடனும், 2008-ஆம் ஆண்டு முதல் ராணுவ ரீதியாகவும் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட இனப் படுகொலை என்றார் அவர்.
அமைப்பின் கர்நாடகக் கிளை தலைவர் பி.வெங்கடேசன் பேசியது:
இலங்கை சுதந்திரமான நாடு என்றாலும், அங்கு வாழும் தமிழர்கள் விவசாயம் செய்ய முடியவில்லை. மீன் பிடி வேலையிலும் ஈடுபட அனுமதிக்கவில்லை. குடும்ப நிகழ்ச்சிகளுக்குக் கூட ராணுவத்திடம் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது.
ஒருசில இடங்களில் தமிழ் தொழிலதிபர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர் என்றார் அவர்.