தொழிலதிபரும் வள்ளலார் அன்பரும் காந்தியவாதியுமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம் இன்று சென்னையில் காலமானார்.
91 வயதாகும் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சென்னையில் மயிலாப்பூர் ஏ.வி.எம்.ராஜேஷ்வரி மண்டபத்தில் நடைபெற்ற காந்தி - வள்ளலார் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மயங்கியுள்ளார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மறைந்த பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சக்தி குழும நிறுவனங்களின் தலைவர். இவருக்கு 2007ல் பத்ம பூஷன் விருது வழங்கி பாரத அரசு கௌரவித்தது. தமிழக சட்டப் பேரவை உறுப்பினராக 3 முறை இருந்துள்ளார். 15 ஆண்டுக் காலம் அவர் சட்டப்பேரவை உறுப்பினராக சேவை புரிந்துள்ளார். காந்தியத்தை வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்தவர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம். மேலும், வள்ளலார் மார்க்கமான சுத்த சமரஸ சன்மார்க்கத்துக்காக பல அளப்பரிய பணிகளைச் செய்துள்ளார். அவர் காந்தி ஜயந்தியான அக்.2ம் நாளில், காந்தி - வள்ளலார் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முதல் வரிசையில் அமர்ந்து உரையைக் கேட்டுக் கொண்டிருந்தபோது அவர் உயிர் பிரிந்துள்ளது.