சேலம் முகநூலில் ஆபாச புகைப்படம் வெளியிட்ட விவகாரத்தில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது, விரைந்து நடவடிக்கை எடுத்து இணையதள முகவரியை முடக்கியிருந்தால் உயிரிழப்பு நேர்ந்திருக்காது என வினுப்ரியாவின் தந்தை அண்ணாதுரை கண்ணீருடன் கூறினார்.
சேலத்தை அடுத்த இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த வேதியியல் பட்டதாரியான வினுப்ரியாவை குறித்து) கடந்த வாரம் வினுப்ரியாவின் முகநூல் பக்கத்தில் அவரின் படம் தவறாகச் சித்தரிக்கப்பட்டு, ஆபாசமாக வெளியிடப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த வினுப்ரியா, நேற்று பெற்றோர்கள் வெளியே சென்றிருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக வினுப்ரியாவின் தந்தை கூறுகையில், இந்த பிரச்னை குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது, விரைந்து நடவடிக்கை எடுத்து இணையதள முகவரியை முடக்கியிருந்தால் எனது மகள் உயிரிழப்பு நேர்ந்திருக்காது.
காவல் துறையின் மெத்தனப் போக்கு காரணமாகவே என் மகள் உயிரிழந்துள்ளார்.
மேலும், புகார் கொடுத்த உடனேயே முடக்கப்படாத முகநூல் முகவரி தனது மகள் உயிரிழப்புக்கு பிறகு முடக்கப்பட்டது எப்படி? சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்காக ரூ.2 ஆயிரம் மதிப்பில் செல்லிடப்பேசி ஒன்று வாங்கி கொடுத்தேன். ஆனால், போலீஸார் இந்த வழக்கில் அலட்சியமாக இருந்துவிட்டனர் என்று கண்ணீருடன் கூறினார்.