புதுதில்லி
'மீனவர் பிரச்சனையைத் தீர்க்க இருநாட்டு மீனவர்களிடையே முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். எல்லை தாண்டி வருவதால் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது'' என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.
மூன்று நாள் பயணமக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் இன்று தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார்.
ஹைதராபாத் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ரணில் எடுத்துரைத்தார். மேலும் இரு நாட்டு உறவு, மீனவர் பிரச்னை குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த ரணில், இரு நாட்டு உறவு மற்றும் வர்த்தகம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ''ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளன. ஆனால், எங்களுக்கு அந்த அச்சுறுத்தல் இல்லை. ஆனால், சார்க் மாநாட்டில் இருந்து 4 நாடுகள் பங்கேற்பதில்லை என்று வாபஸ் பெற்ற பின்னர் நாங்களும் வாபஸ் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
எல்லை தாண்டிய தீவிரவாதம் மிகப் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதை எவ்வாறு கையாள்வது என்று சார்க் மாநாட்டில் ஆலோசிக்க வேண்டும். மீனவர் பிரச்னையை போக்க முதலில் இருதரப்பு மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். நவம்பர் முதல் வாரத்தில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் இருநாடுகளின் மீனவ அமைப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் தான் தீர்வு என்று நினைக்கக் கூடாது. உங்களது பிரதமர் இருதரப்பிலும் டென்ஷனை தணிக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
சீனாவுடனான எங்களது உறவு பொருளாதரத்தை மையமாகக் கொண்டதே தவிர ராணுவத்தை மையமாகக் கொண்டது அல்ல'' என்று கூறினார்.