

கடனை திருப்பி செலுத்த முடியாமல் நேற்று தற்கொலை செய்து கொண்ட விவசாயி வெள்ளியங்கிரி நாதனின் டிராக்டர் கடனை தள்ளுபடி செய்துள்ளதாக தனியார் வங்கி அறிவித்துள்ளது. மேலும் அவரது டிராக்டரை திருப்பி தருவதாகவும் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த விவசாயி வெள்ளியங்கிரி நாதன் (60). இவர் தனியார் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் பெற்று டிராக்டர் ஒன்று வாங்கியிருந்தார். இந்நிலையில், விவசாயம் பொய்த்ததால் டிராக்டருக்கு கடந்த இரண்டு மாதங்களாக கடன் தவணையை செலுத்தவில்லை.
இதனால், கடன் தவணையை செலுத்தும்படி வங்கியிலிருந்து தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்கள் அவகாசம் தருமாறு வங்கியிடம் வெள்ளியங்கிரி நாதன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், வங்கி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்று (புதன்கிழமை) காலை டிராக்டரை வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்தனர்.
டிராக்டரை மீட்டுத்தருமாறு பல்லடம் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுக்க முயன்றுள்ளார் வெள்ளியங்கிரி நாதன். ஆனால், டிராக்டரை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை வங்கி அதிகாரிகள் பெற்றுவைத்திருந்ததால் நடவடிக்கை ஏதும் எடுக்க இயலாது என போலீஸ் தரப்பு தெரிவித்துவிட்டது. இதனால், மனமுடைந்த விவசாயி காவல் நிலையத்துக்கு எதிராகவே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இன்று காலை பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் விவசாயிகள், அனைத்து கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். வங்கி கடனுக்காக விவசாயி வெள்ளியங்கிரி நாதன் தற்கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் வெள்ளியங்கிரி நாதனின் டிராக்டர் கடனை தள்ளுபடி செய்துள்ளதாக தனியார் வங்கி அறிவித்துள்ளது. மேலும் அவரது டிராக்டரை திருப்பி தருவதாகவும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.