

புதுச்சேரி: நாடு முழுவதும் நதிகளை இணைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்ற வேண்டும் என சத்குரு ஜக்கிவாசுதேவ் வலியுறுத்தியுள்ளார்.
நாடுமுழுவதுமுள்ள நதிகளை இணைத்து நீர் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சார்பில் நதிகளை மீட்போம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 7000 கி.மீ. தொலைவு தேசிய அளவிலான விழிப்புணர்வு வாகனப் பேரணி கோவையில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது.
ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடைபெறும் இந்த வாகனப் பேரணி புதன்கிழமை இரவு புதுச்சேரி வந்தது. இதன் தொடர்ச்சியாக கடற்கரை காந்தி திடலில் வியாழக்கிழமை ஜக்கி வாசுதேவ் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் ஜக்கி வாசுதேவ் கூறியதாவது: நதிகளை இணைப்பதற்கு சட்டப்படியான நடவடிக்கை தேவைப்படுகிறது. நதிகளை இணைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். நீதிமன்றத்தால் யாருக்கும் தண்ணீர் கொடுக்க முடியாது,.
இருக்கும் நீரை எவ்வாறு பங்கீடு செய்வது என்பது குறித்துதான் நீதிமன்றம் சொல்ல முடியும். நதிகளில் நீர் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதை எவ்வாறு பங்கீடு செய்வது என்பது குறித்து மக்களும், அரசாங்கமுதான் முடிவு செய்ய வேண்டும். பங்கீடு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டால் நீதிமன்றம் மூலம் தீர்வு காணலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.