புல்லட் ரயிலை எதிர்ப்பவர்கள் மாட்டு வண்டியில் செல்லட்டும்: தேர்தல் பிரசாரத்தில் மோடி பேச்சு

புல்லட் ரயில் திட்டத்தை எதிர்ப்பவர்கள் மாட்டு வண்டியில் செல்லட்டும், அதுபற்றி எனக்கு கவலை இல்லை என்று காங்கிரஸ் கட்சியை
புல்லட் ரயிலை எதிர்ப்பவர்கள் மாட்டு வண்டியில் செல்லட்டும்: தேர்தல் பிரசாரத்தில் மோடி பேச்சு

பரூச்(குஜராத்): புல்லட் ரயில் திட்டத்தை எதிர்ப்பவர்கள் மாட்டு வண்டியில் செல்லட்டும், அதுபற்றி எனக்கு கவலை இல்லை என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. 

மொத்தம் 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப் பேரவைக்கு வரும் 9 மற்றும்14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸூக்கும், பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதால் அந்த மாநிலலத்தின் அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. 

முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளநிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அந்த மாநிலத்தில் பிரதமர் மோடி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

பிரதமர் மோடி நேற்றும் இன்றும் குஜராத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். நேற்று நர்மதா நதிக் கரையில் அமோத் சர்க்கரை ஆலை அருகில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். 

அப்போது 1.1 லட்சம் கோடி ரூபாயில் மும்பை- அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை மத்திய அரசும் ஜப்பான் நாட்டு நிறுவனமும் இணைந்து செயல்படுத்துகிறது. இதன்மூலம் குஜராத்துக்கு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். பரூச் பகுதி மக்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். 

இதற்கு ஜப்பானில் இருந்தா சிமெண்ட் வருகிறது? இரும்பு, தொழிலாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள். இவை எல்லாம் இந்தியாவில் இருந்து தானே வருகிறது. நாம் அதை ஜப்பானிடம் இருந்தா வாங்குகிறோம், இல்லையே. இது மிகப்பெரிய ஒப்பந்தம் அல்லவா? முன்னால் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசும் இந்த திட்டத்தை கொண்டு வர விரும்பினாலும், அதிக செலவாகும் என்பதால் அதனை அவர்களால் கொண்டுவர முடியவில்லை. அதனால் புறக்கணித்துவிட்டது. இப்போது பாஜக அதனை நிறைவேற்றி வருகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு பிடிக்கவில்லை. காங்கிரஸூக்கு உள்ள ஒரே வஞ்சம் என்னவென்றால் அவர்கள் எதையும் சாதிக்க முடியாவிட்டால், வேறு யாராவது அதைச் செய்து சாதித்துவிடக்கூடாது என்பதுதான் அவர்களின் வஞ்சக புத்தி. அதனால் புல்லட் ரயிலை காங்கிரஸ் எதிர்க்கிறது. புல்லட் ரயிலை எதிர்ப்பவர்கள் மாட்டு வண்டிகள் மீது செல்ல வேண்டும், அதுபற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம் என்று கடுமையாக காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசினார். 

நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குஜராத் மக்களுக்காகவும், இந்த மாநிலத்துக்காகவும் எந்த நன்மையும் செய்யவில்லை. கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையில், கல்வியைக்கூட தரவில்லை. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின்பும், நான் குஜராத் முதல்வராக இருந்த போதும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கட்ச் மற்றும் பரூச் மாவட்டங்களில் அதிக அளவில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

குஜராத்தில் உருவாகும் ஒற்றுமை சதுக்கத்தில் உலகில் மிகப்பெரிய சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவச்சிலை நிறுவப்படுகிறது. இதுவும் வளர்ச்சித் திட்டம்தான். இதன்மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர முடியும். 

குஜராத் கடல் பகுதியில் 1,300க்கும் மேற்பட்ட சிறு சிறு தீவுகள் திட்டுகள் உள்ளன. அவைகள் அனைத்தும் சிங்கப்பூரை விட பெரியவை. அவைகளை சிங்கப்பூர் போல் மாற்றும் திட்டம் உள்ளது. அதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். எனவே நாளை குஜராத்தை சிறந்த மாநிலமாக மாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று மோடி பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com