11 எம்எல்ஏக்கள் வழக்கில் மனசாட்சிப்படி தான் தீர்ப்பு வழங்கினோம் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார். மனசாட்சிக்கு விரோதமாக தீர்ப்பு வழங்கவில்லை என்பது கடவுளுக்கு தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.
துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது அதிமுக கொறடா உத்தரவை மீறி ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா ஒட்டன்சத்திரம் சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் பெஞ்ச் தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பு சட்டத்திற்கு புரம்பானது என பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தீர்ப்பு குறித்து விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது, அரசியல் ஆதாயத்திற்காக விமர்சிப்பவர்கள் குறித்து கவலை இல்லை. மனசாட்சிக்கு விரோதமாக தீர்ப்பு வழங்கவில்லை என்பது கடவுளுக்கு தெரியும் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.