புதுதில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(94) உடல்நலம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் இன்று நேரில் சென்று கேட்டறிந்தனர்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மூட்டுவலி பிரச்னையினால் அவதிப்பட்டு வந்தநிலையில், கடந்த இருபது ஆண்டுகளில் 10 முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், வயது மூப்பு மற்றும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட அவரால் சரிவர பேசமுடியாமல் போனதை அடுத்து அரசியலில் இருந்து ஒதுங்கினார். இதைத்தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்த அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிறுநீரக தொற்று மற்றும் குறைந்த சிறுநீர் வெளியீடு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய்க்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.
வாஜ்பாய் உடல் நலம் குறித்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் மீட்டெடுக்கப்பட்டு மருத்துவர்களின் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வாஜ்பாய்க்கு உரிய சிகிச்சை அளித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வயதுமூப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாஜ்பாயை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பலர் மருத்துவமனைக்கு நேரில் சென்று வாஜ்பாய் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.