அரியானா: அரியானா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாகன உரிமம் உள்ளிட்ட அனைத்து அரசு சலுகைகளும் ரத்து செய்யப்படும் என அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.
அரியானா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் பாலியல் குற்றங்கள் உள்பட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.
இது குறித்து முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசுகையில், ”மாநிலத்தில் பாலியல் குற்றங்கள் உள்பட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு வாகன உரிமம், துப்பாக்கி உரிமம், வயதானவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து அரசு சலுகைகளும் ரத்து செய்யப்படும். அவர்களுக்கு குடும்ப அட்டை உரிமம் மட்டும் வழங்கப்படும். நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரையில் இத்திட்டம் இடைநீக்கத்தில் இருக்கும்.
எனினும், குற்றவாளி அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டால், திரும்பப் பெறப்பட்ட அவருக்குரிய அனைத்து அரசு சலுகைகளும் திரும்ப வழங்கப்படும் என்றும் குற்றவாளி என தீர்ப்பு அறிவிக்கப்பட்டால், அவருக்குரிய அனைத்து அரசு சலுகைகளும் நிரந்தரமாக நீக்கப்படும் என்று மனோகர் லால் கட்டார் கூறினார்.
பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரும் சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) அல்லது ரக்ஷா பந்தன் (ஆகஸ்ட் 26) அன்று துவங்கப்படும் என்றார்.
மாநில அரசு வழங்கியதைத் தவிர, ஒரு வக்கீல் ஒரு வழக்கறிஞரை நியமிக்க விரும்பினால், அவருக்கு ரூ. 22,000 நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார்.
மேலும் காவல்நிலையத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் மற்றும் ஈவ்டீசிங் வழக்குகள் தடையின்றி விசாரிக்கப்படும். விசாரணை அதிகாரிகள் பாலியல் குற்ற வழக்கு விசாரணையை 1 மாதம் மற்றும் ஈவ்டீசிங் வழக்கு விசாரணையை 15 நாட்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும்.
இதுகுறித்து ஆறு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்படும். இது சம்மந்தமாக பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகளை விரைவில் சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார்.
பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்காக மாநில அரசு வழங்கியதைத் தவிர, மேலும் ஒரு வழக்குரைஞர் நியமிக்க விரும்பினால், அவருக்கு ரூ. 22 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார்.