கனமழை எதிரொலி: நெல்லை, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டத்தில் பொதுதேர்வு இல்லாத பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கனமழை எதிரொலி: நெல்லை, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

துாத்துக்குடி: தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டத்தில் பொதுதேர்வு இல்லாத பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியக் கடல் பகுதியில் இலங்கை, குமரிக்கடல் மற்றும் மாலத் தீவுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது நேற்று செவ்வாய்க்கிழமை காலை மாலத் தீவுக்கு கிழக்கே 290 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.

இது மேலும் வலுவடைந்து, வடமேற்கு திசையில் லட்சத்தீவுகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு (மார்ச் 14, 15) மழை பெய்யும். 

அதேபோல், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும். தென்தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை கனமழை பெய்யக்கூடும். சென்னையில் பொதுவாக மேகமூட்டமாகக் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன்காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடியில் சில இடங்களில் லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் தொடர் மழையாக பெய்து வருகிறது. 

இந்நிலையில், தொடர் மழை காரணமாக திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டத்தில் பொதுதேர்வு இல்லாத பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். தேர்வு எழுதும் மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் ஆகியோர் தேர்வு மையங்களுக்கு வழக்கம் போல் செல்வார்கள் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம் தூத்துக்குடி, கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் லட்சத்தீவு நோக்கி நகர்வதால், லட்சத்தீவு பகுதிகளுக்கு நாளை வியாழக்கிழமை (மார்ச்.15) வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 20 மி.மீ., பாம்பன், கமுதி, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, தூத்துக்குடி, கோவில்பட்டி, சிவகாசி ஆகிய இடங்களில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com