ஜகர்த்தா: இந்தோனேஷியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவெசியில் கடந்த மாதம் 28-ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டு, ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.
170 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சுலாவெசி மாகாணத் தலைநகரான பாலூ, டோங்கலா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிகக் கடுமையான பாதிக்கப்பட்டன.
இந்த இயற்கை பேரழிவுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தையும் தாண்டி உள்ளது. மேலும், பல கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டது. பலாரோவா மற்றும் பெடோபோ கிராமங்களைச் சேர்ந்த 5,000 பேரைக் காணவில்லை என்று அந்த கிராமங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இயற்கையின் இந்த கோர தாண்டவத்தில் ஏராளமான உடல்கள் இன்னும் மீட்கப்படாமல் உள்ள நிலையில், அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜவா மற்றும் பாலி தீவுகளில் இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
இதனால் மக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது கட்டடங்களுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.