தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா கூறிய புகார் தொடர்பாக, பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
அண்மையில் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா அளித்த பேட்டி ஒன்றில், நானா படேகர் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற திரைப்படப் பிடிப்பில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ புகார் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, அவருக்கு இந்த விவகாரத்தில் பல நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர். அப்போது சிலர் மட்டும், சட்ட ரீதியில் நானா படேகருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, மும்பை (மேற்கு) ஓஷிவாரா காவல் நிலையத்தில் நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் அளித்தார். அந்தப் புகாரில் அவர் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சாமி சித்திக், இயக்குநர் ராகேஷ் சாரங் மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மன் தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோரது பெயரையும் அவர் இணைத்துள்ளார்.
இந்நிலையில், தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா கூறிய புகார் தொடர்பாக, பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த புகார் குறித்து, நேற்று தமது வழக்குரைஞருடன் ஒஷிவாரா காவல்நிலையம் சென்ற தனுஸ்ரீ, நானா படேகர் உள்ளிட்ட 4 பேர் மீது எழுத்துப்பூர்வமாக புகார் மனு கொடுத்தார்.
இந்நிலையில், 4 பேர் மீதும் இரண்டு பிரிவுகளில் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.