ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சம்பா மாவட்டத்தில் அதிகபட்சமாக 81 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 8.3 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் ஜம்முவில் 78.6 சதவீத வாக்குகளும் காஷ்மீரில் 3.4 தவீத வாக்குகளும் பதிவாகின.
இந்நிலையில், 44 வார்டுகள், ஜம்மு பகுதியில் உள்ள சம்பா மாவட்டத்தில் 56 வார்டுகள் என மொத்தம் 100 வார்டுகளில் மட்டுமே 3-ஆம் கட்ட தேர்தல் இன்று சனிக்கிழமை (அக்.13) காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வந்தனர். அசம்பாவிதம் எதுவுமின்றி தேர்தல் நடைபெற வேண்டும் என்பதை உறுதிசெய்வதற்காக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், அதிகபட்சமாக சம்பா மாவட்டத்தில் 81.4 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. பாரமுல்லா மாவட்டத்தில் 75.3 சதவீதம், அனந்த்நாக் மாவட்டத்தில் 3.2 சதவீதம், ஸ்ரீநகரில் மட்டும் மிகவும் குறைந்தபட்சமாக 1.8 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓட்டுமொத்தமாக இன்று நடைபெற்ற 3-ஆம் கட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 16.3 சதவீதம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
207 வார்டுகளில் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. ஆனால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 49 வார்டுகளில் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். 58 வார்டுகளில் யாரும் போட்டியிடவில்லை. இதனால், 107 வார்டுகளில் தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.