திருவள்ளூர்: நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று பல நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த பிரபல ரவுடி பினுவை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மலையம்பாக்கத்தில் ரவுடி பினு கூட்டாளிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தனிப்படை போலீஸார் அவரை தேடி வந்தபோது பிப்ரவரி 13-ஆம் தேதி ரவுடி பினு போலீஸாரிடம் சரணடைந்தார். அவர் மீது வழக்குப் பதிவுசெய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
சுமார் 3 மாதம் வேலூர் சிறையில் இருந்து வந்த ரவுடி பினு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அவருக்கு கடந்த 23-ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து அவர் விடுக்கப்பட்டார். சென்னை மாங்காடு காவல்நிலையத்தில் ஆஜராகி தினமும் கையெழுத்திட வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த 1 வாரமாக காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவில்லை என்றும் பினு தலைமறைவானதை போலீஸார் உறுதி செய்தனர். இதுகுறித்து போலீஸார் நீதிமன்றத்தில் ரவுடி பினுவின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தலைமறைமான ரவுடி பினுவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கி இருந்து ரவுடி பினுவை பதுங்கி இருந்து ரவுடி பினுவை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.