ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சி.ஆர்.பி.எப் வீரர்கள் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பாதுகாப்புப்படையினர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து சி.ஆர்.பி.எப். முகாமை சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வமா மாவட்டத்தின் ககபுரா பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் முகாம் உள்ளது. இந்த முகாம் மீது நேற்று இரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், முகாமில் இருந்த இரண்டு வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் புல்வமா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இந்த தாக்குதலையடுத்து, நிகழ்விடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் கன்கன் பகுதியில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சில நாட்களிலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது
கடந்த வாரம் புல்வமாவில் உள்ள மற்றொரு சி.ஆர்.பி.எப் வீரர்கள் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு வீரர் காயம் அடைந்தார்.