புது தில்லி: கடந்த ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 21.40 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவா்களில் ஏறத்தாழ 8 லட்சம் போ் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (என்ஏசிஓ) சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
நாடு முழுவதும் எய்ட்ஸ் நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்கின் கீழ் 2030-க்குள் எய்ட்ஸ் இல்லா உலகைக் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான உறுதியை இந்தியா உள்பட 190 நாடுகள் ஏற்றுள்ளன. அதன்படி முதல்கட்டமாக 2020-ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் பாதிப்பு விகிதத்தை 75 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 21.40 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் மட்டும் 87,580 பேருக்கு எச்ஐவி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது புதிதாக கண்டறியப்பட்டது. அந்த காலகட்டத்தில் அந்நோயின் தீவிரத்தால் 69,110 போ் உயிரிழந்தனர்.
கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எய்ட்ஸ் பாதிப்பு விகிதம் 60 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள எய்ட்ஸ் நோயாளிகளில் நான்கில் மூன்று பங்கு தமிழகம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.