சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி அன்னா ராஜம் காலமானார்
மும்பை: சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியான அன்னா ராஜம் மல்ஹோத்ரா(91) வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மும்பையில் காலமானார்.
1927-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் பிறந்தவர். கோழிக்கோட்டில் தனது பள்ளிப்படிப்பை முடித்த அன்னா ராஜம், அதன்பின் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். நாடு சுதந்திரம் அடைந்த பின், 1951-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடிமையியல் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் அதிகாரி அன்னா ராஜம் மல்ஹோத்ரா.
வெளியுறவுத்துறையில் பணியாற்ற வேண்டும் என்று தீராத ஆசை கொண்ட அன்னா ராஜமுக்கு, உள்நாட்டுப் பணிகளுக்கு பொருத்தமானவராக இருப்பார் எனக் கருதி அவரை உள்நாட்டில் பணி அமர்த்தப்பட்டார். முதன் முதலில் ஓசூரில் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவரின் ஆட்சிக் காலத்தில் ஒசூர் பகுதியில் கிராமத்துக்குள் புகுந்த 6 யானைகளை சுட்டுக்கொல்ல முயன்ற போது அதைத் தடுத்து யானைகளை விரட்டியடிக்க முயற்சி எடுத்தார்.
சென்னை மாகாணத்தின் முதல்வராக ராஜாஜி இருந்த போது காவல்துறை அதிகாரியாக பணியாற்றி உள்ளார். முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரிடமும், ஏழு முதல்வர்களுடனும் அன்னா ராஜம் மல்ஹோத்ரா இணைந்து பணியாற்றியுள்ளார்.
ராஜீவ்காந்தி கடந்த 1982-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவர் ஆசிய விளையாட்டுப் போட்டி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். அப்போது, ராஜீவ் காந்தியுடன் மல்ஹோத்ரா பணியாற்றியுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 8 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவருடன் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மல்ஹோத்ரா உடன் சென்று பணியாற்றியுள்ளார்.
அன்னா ராஜமின் சேவைகளைப் பாராட்டி அவருக்குக் கடந்த 1989-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
இவரது கணவர் ஆர்.என். மல்ஹோத்ரா கடந்த 1985 முதல் 1990-ம் ஆண்டுவரை ரிசர்வ் வங்கி ஆளுநராக பணியாற்றியவர்.