மீரட்: உத்தரபிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை பாஜக எம்.எல்.ஏ. வீட்டில் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம், சர்தானா தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சங்கீத் சாம். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு வெடிகுண்டு வீசி கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டலை அவர் பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில், இன்று அதிகாலை சங்கீத் சாம் வீட்டின் அருகே வந்த மர்ம கும்பல் ஒன்று, சங்கீத் வீட்டின் முக்கிய வாயிலாக இருந்த பாதுகாவலர்களின் அறையை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். பின்னர், தாங்கள் கொண்டு வந்திருந்த கையெறி குண்டுகளையும் வீசி உள்ளனர். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும், இழப்பும் ஏற்படவில்லை.
தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார் மற்றும் தடவியல் குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்கள் ஒரு கையெறி குண்டு மற்றும் வெற்று புல்லட் ஷெல்களையும் கைப்பற்றி உள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை தடயங்களாக சேகரித்து குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று அதிகாலையில் பாஜக எம்.எல்.ஏ. வீட்டின் மீது துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.