புதுதில்லி: குடியரசுத் தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் உள்ளிட்ட விஐபிகளின் விமான பயணத்துக்காக ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ.1,146.86 கோடி நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
முன்னாள் ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு ஏர்இந்தியா பதிலளித்துள்ளது.
அதில், குடியரசுத்தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட விஐபிகளுக்கு பாதுகாப்பு கருதி தனி விமானங்களில் பயணம் செய்கிறார்கள். அந்த வகையில் பயணத்துக்கு ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ.1,146.86 கோடி கட்டண பாக்கி செலுத்த வேண்டும் என்று தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் ரூ.211.17 கோடி, மத்திய அமைச்சரவை செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகமும் ரூ.543.18 கோடி, வெளியுறவுத்துறை அமைச்சகம் ரூ.392.33 கோடி பாக்கி வைத்துள்ளதாக பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பல ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி நஷ்டத்தில் இயங்கு வரும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாதம் வரை ரூ.325 கோடி கட்டண பாக்கி வைத்துள்ள மத்திய அரசு, தற்போது ரூ.1,146.86 கோடி பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் சுமை ரூ.50,000 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு சிஏஜி அறிக்கையிலும் மத்திய அரசு விமான பயண கட்டண பாக்கி வைத்துள்ள பிரச்னை குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது.
விஐபிகளின் விமானத்திற்கான கட்டணத்தை பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், பிரதமரின் அலுவலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படுகின்றன.