புதுதில்லி: ஈரான் சிறை பிடித்து வைத்துள்ள ஸ்டெனா இம்பீரோ கப்பலில் உள்ள 18 இந்தியர்களையும் விரைவில் விடுவித்து தாயகம் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகின்றோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 19 ஆம் தேதி ஸ்டெனா இம்பீரோ என்ற கப்பலில் ஆதித்ய வாசுதேவன் என்ற தமிழக மாலுமி உள்பட 18 இந்தியர்கள் சென்றனர். அவர்கள் சென்ற கப்பலை, ஈரான் அருகேயுள்ள ஹார்மோஸ் நீரிணை பகுதியில், அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சிறைபிடித்தனர்.
இதனை அடுத்து தமிழக மாலுமி உள்பட இந்தியர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் இன்று எழுதினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழில் டுவிட்டர் மூலம் பதில் அளித்துள்ளார். அதில், ஸ்டெனா இம்பீரோ கப்பலில் உள்ள 18 இந்தியர்களையும் விரைவில் விடுவித்து தாயகம் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகின்றோம். இது தொடர்பாக ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கின்றோம்.
தெஹ்ரானில் உள்ள நமது தூதரக அதிகாரிகள் மாலுமிகளைச் சந்தித்துள்ளனர். அவர்கள் நலமாக இருப்பதாகத் தெரிகிறது என தெரிவித்துள்ளார்.