அமர்நாத் யாத்ரீகர்களை விமானம் மூலம் கொண்டுவர விமானப்படை ஏற்பாடு
ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்களை விமானம் மூலம் கொண்டுவர விமானப்படை ஏற்பாடு செய்துள்ளது.
ஆயுதந்தாங்கிய தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாகவும், ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பும் இந்த தாக்குதலில் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளதாகவும், குறிப்பாக, அமர்நாத் யாத்ரீகர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்கியிருக்கும் யாத்ரீகர்கள் தங்களது பயணத்தை விரைவில் முடித்துக் கொண்டு சொந்த ஊர்களுக்கு திரும்புமாறும், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு, ஊர் திரும்புவதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு நேற்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து பாதுகாப்புப படை வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுபத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமர்நாத் யாத்ரீகர்களை விமானம் மூலம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மாநில அரசு, இதுகுறித்து இந்திய விமானப்படையின் உதவியையும் கோரியது. இதையடுத்து இந்திய விமானப்படை சி-17 குளோப்மாஸ்டார் போக்குவரத்து விமானத்தில் யாத்ரீகர்களை கொண்டுவருவதற்கான நடவடிக்கையை விமானப்படை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.