ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பதட்டமான சூழல் நிலவி வருவதால் அந்த பகுதிக்கு சுற்றுப்பயணம் செல்வதை தவிர்க்குமாறு பிரிட்டன், ஜெர்மன் அரசுகள் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
பயங்கரவாத முகாம்களில் பயிற்சி பெற்ற இந்த 15 பயங்கரவாதிகளும் காஷ்மீர் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய ராணுவத்திற்கு எதிராக அதிரடியாக தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறையின் தகவலைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் முழுவதும் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் ஊடுருவல் மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீரின் முக்கிய பல்கலை., மற்றும் கல்லூரிகளில் இருக்கும் மாணவர்கள் உடனடியாக வெளியேறவும், காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், யாத்திரை வரும் பக்தர்கள் அனைவரும் திரும்பிச் செல்லுமாறு உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக நிலவும் பதற்ற நிலை காரணமாக காஷ்மீருக்கு பயணம் செய்வதை தவிர்க்கும் படி இந்தியா வந்துள்ள பிரிட்டன், ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளை அந்நாட்டு அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகள் காஷ்மீரில் இருந்து வெளியேற மத்திய அரசு அறிவித்ததால் பிரிட்டன், ஜெர்மன் அரசுகள் இந்த உத்தரவை அந்நாட்டு மக்களுக்கு பிறப்பித்துள்ளது.