உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிதாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர், சாசி சிங் இருவரும் தில்லி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில், பதின்வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரிடம் சிபிஐ அதிகாரிகள் மூவர் அடங்கிய குழு நேற்று சனிக்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது, சாலை விபத்து தொடர்பாக செங்கரிடம் பல மணிநேரங்கள் அவர்கள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், உன்னாவ் பாலியல் வழக்கு சம்மந்தமாக, குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரின் வீடு, அலுவலகம் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னௌ, உன்னாவ், பாண்டா, பதேபூர் உள்ளிட்ட 17 இடங்களில் இன்று காலை முதல் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிதாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர், சாசி சிங் இருவரும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தில்லி திஹார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.