பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற்று வரும் தற்போதைய ஆட்சி நிலையான ஆட்சியில்லை, மிக விரைவில் தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று மதச்சாற்பற்ற ஜனத தள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வரும், மஜத தலைவருமான குமாரசாமி தொண்டர்களிடையே பேசுகையில், தற்போதைய ஆட்சி நிலையான ஆட்சியில்லை. மிக விரைவில் தேர்தலுக்கு தயாராகுங்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதாகவும், அந்த இடைத்தேர்தலில் என்ன வேண்டுமென்றாலும் நடக்க வாய்ப்பு உள்ளது அல்லது 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கலாம்.
நான் உறுதியாகக் கூறுகிறேன், தற்போதைய அரசு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்றவர், தற்போது நாம் எந்த கூட்டணியிலும் இல்லை. நமக்கு, எந்த கூட்டணியும் தேவையில்லை. எனக்கு அதிகாரம் தேவையில்லை. உங்களின் அன்பு தான் தேவை என்று கூறினார்.
இதனிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில், போதிய வாக்குகள் கிடைக்காமல் ஆட்சி கவிழ காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் தான் காரணம் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடனான கூட்டணி குறித்து, இந்த வார இறுதிக்குள் காங்கிரஸ் கட்சி தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.