சென்னை: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370வது மற்றும் 35ஏ பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் அவையில் இதற்கு எதிராக பேசினார்கள். சென்னையில் பேட்டி அளித்த ஸ்டாலின், ஜம்மு காஷ்மீரை பிரிப்பது கண்டனத்துக்குரியது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370வது மற்றும் 35ஏ பிரிவு ரத்து செய்யப்படுவது மக்களுக்கு எதிரானது. அம்மாநில மக்களை கேட்காமல் நாம் இது போன்ற பெரிய முடிவை எடுக்க கூடாது. அம்மக்களுக்கு நாம் செய்யும் துரோகம் இது. இன்று ஜனநாயக படுகொலை நடந்துள்ளது.
முதலில் காஷ்மீரில் முறையாக தேர்தல் நடத்த வேண்டும். அங்கு தேர்தல் நடத்தி சட்டப்பேரவையை கூட்ட வேண்டும். அவர்கள் மாநில எம்எல்ஏக்கள்தான் இந்த சட்டம் குறித்து முடிவு எடுக்க வேண்டும். அதை நீக்கும் அதிகாரம் நமக்கு கிடையாது. இதற்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அதிமுக ஆதரவு அளித்துள்ளது. அதிமுக இதற்கு ஆதரவு அளித்துள்ளதன் மூலம் மிக மோசமான உதாரணமாக மாறி உள்ளது. அதிமுக என்பதற்கு பதிலாக அவர்கள் தங்கள் கட்சியை அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என்று மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினார்.