சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திங்கள்கிழமை (ஆக 5) பவுனுக்கு ரூ.352 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 27 ஆயிரத்து 680-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் முதல் முறையாக ரூ. 20 ஆயிரத்தை எட்டியது. திடீரென அடுத்த இரண்டே நாள்களில் பவுனுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து ரூ. 21 ஆயிரத்தையும் தாண்டியது. இதையடுத்து வந்த ஆண்டுகளில் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்தது.
பின்னர் கடந்த 2017-ஆம் ஆண்டில் ஏப்ரல் 30-ஆம் தேதி ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.22 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.23 ஆயிரத்தையும், செப்டம்பரில் 24 ஆயிரத்தையும் கடந்தது. 2013-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை தங்கம் விலை 25 ஆயிரத்துக்குள் இருந்தது.
இதையடுத்து இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு பவுன் தங்கம் விலை முதல் முறையாக ரூ. 25 ஆயிரத்துக்கும் மேல் உயர்வு கண்டது.
தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 26 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை, ஆகஸ்ட் 1-இல் ரூ.26 ஆயிரத்து 480-க்கு விற்பனையானது. இந்தநிலையில் அடுத்த நாளான வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.584 அதிகரித்து ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்து 64-க்கு விற்கப்பட்டது.
புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை கடந்த சனிக்கிழமை மேலும் உயர்ந்தது. அதன் விலை வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ.33 அதிகரித்திருந்தது. இதனால் பவுனுக்கு ரூ.264 அதிகரித்து ஒரு பவுன் தங்கம் விலை ரூ.27 ஆயிரத்து 328 ஆக உயர்ந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி முதல் 3 நாள்களில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.848 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் விலை உயர்ந்து தற்போது ரூ.44.50 ஆக இருந்தது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3 நாட்களில் 50 டாலர் அதிகரித்து 1,452 டாலரை எட்டியுள்ள நிலையில், இன்று தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது. இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.352 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து, 1 கிராம் தங்கம் 3,460க்கும், ஒரு சவரன் ரூ. 27,680-க்கு விற்பனையாகிறது.