புதுதில்லி: 8 வழிச்சாலை திட்டப் பணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தொடந்த வழக்கில், சுற்றுச்சூழல் அனுமதி வரும்வரை 8 வழிச்சாலை பணியை தொடங்க மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்தை ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. இதைத்தொடர்ந்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 8 வழிச் சாலை திட்டம் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனிடையே, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கை நீதிபதிகள் என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுச்சூழல் அனுமதி வரும்வரை 8 வழிச்சாலை திட்டத்திற்கான எந்தப் பணியையும் தொடங்க மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது.
மேலும் எட்டு வழிச்சாலைக்காக நிலம் அளவீடு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கைப் பொறுத்தவரை, மத்திய அரசு தாக்கல் செய்த மனு மற்றும் ஆவணங்களில் சில தவறுகள் இருப்பதாகவும் அதனை சரிசெய்த பிறகு மனுவை தாக்கல் செய்யுமாறும், வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.