கொச்சி: தொடர் கனமழை காரணமாக கொச்சி சர்வதேச விமான நிலையம் வரும் 11 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்க்கும் கனமழையால் வயநாட்டின் புத்துமாலாவில் ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 40 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதையொட்டி மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, திரிசூர், பாலக்காடு, கன்னூர், காசர்கோடு, ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கொச்சி சர்வதேச விமான நிலையம் வரும் 11 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 3 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள பெரியார் ஆறு மற்றும் கால்வாயில் நீர் மட்டம் உயர்ந்து வருவதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக, கேரள மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.